திங்கள், 17 அக்டோபர், 2022

தோற்பேனோ காதலிலே.....

நீர்க்குமிழி போன்றவனை நீர் வெல்லலாகுமோ!  நடவாது....... நாணலென வாழ்வேன் நான், என்றன் வரிகளிலே!
======================================







======================================
தோற்பேனோ காதலிலே....
=========================
அலைகடலிற் சுழல்கின்ற அமைதியிலாத் திரைபோல,
நிலையின்றி நெகிழ்ந்துருகும் நேசமெனும்  நினைவெழுப்பி,
மலைமுகட்டுப் பனியுறையும் வளிக்குளிராய் உளம்பற்றுஞ் 
சிலையழகே! செம்புலத்து நீரெனநாம்  என்றிணைவோம்?

வானகத்தி லுலவுகின்ற வஞ்சிநிலா என்னெண்ண
மீனுலவும் மனக்குளத்தில் மேய்ந்தெனையே சாய்ப்பதுடன்,
வேனலதன் வாதையென வேதனையைத் தான்தந்தே,
கானலென ஏய்ப்பதையே காரியமாய்ச் செய்வதுமேன்?

வார்த்தைகளைக் கோத்துகவி வனைகின்ற கவிஞனெனை,
நீர்க்குமிழி போன்றவனை, நீர்வெல்ல லாகுமோ? 
வேர்வையது நிலம்நனைக்க வேகாத வேனலிலும்
சோர்விலா துழைப்பவன்நான்; தோற்பேனோ  காதலிலே?
==========================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக