திங்கள், 17 அக்டோபர், 2022

வாழ்வதுதான் செறிவு...

வாழ்வதுதான் செறிவு.   மதிப்பெண்ணுக்கும், தேர்வுக்கும், காதலுக்கும், வேறு எதையும் எதிர்கொள்ளத் துணியாமல் சாவை ஏற்பதா நிறைவு?  எல்லீரும் வாழ்வீரே!  விதிக்கப்பட்ட நாள்வரை வாழ்வதுதான் இயல்பென்றே வாழ்வீரே!  நொடிப் போதில் எடுக்கும் முடிவால் எல்லாம் முடிந்து விடும்;  ஆனால் பெற்றவரும், உற்றவரும், தோழமையும் இந்தப் பிரிவாற்றாமையால், எத்தனை துயரடைவர் என்பதை ஒரு நொடி சிந்தித்தால், இப்பாழ் முடிவைப் பலரும்  எடுத்திருக்கவே மாட்டார் என்பது திண்ணம்.
==========================================









==========================================
வாழ்வதுதான் செறிவு....
=========================
சுழலெனவே சுற்றுகின்றச் சோதனையில் சோர்ந்துநிதந் 
தழலெனவே எரிந்துமனந் தளர்ந்துவிழும் நேரமதில்,
நிழலெனவே நிதமலைந்து நீறாகும் எண்ணமதால், 
விழலெனவே மண்டுகின்ற வெறுங்கனவுக் கற்பனைகள்!

ஏதுமற்ற இருள்நினைவில் இதயத்தைத் தான்தொலைத்தே, 
உதயமாகும் உணர்வுகளில் உருகிநிதம் உறவாடி,
சிதிலமென சிதறிவிட்டச் செங்கல்லாய் நினைவெரிக்கப் 
பதியுமந்தப் பாழுளத்துப் பாதவலி வேதனைகள்!

தலைநோகுங் கடன்சுமையைத் தரையிறக்க வழியின்றி, 
அலைந்தலைந்தே அதன்மீதில் அடுக்கடுக்காய்ச் சேர்க்குமுளம்;
உலைநெருப்பில் உழல்வதுபோல் உலகாய உணர்வின்றி, 
வலைவிழுந்தச் சேலெனவே மடிவதுதான் அறமாமோ? 

தளர்ந்துவிட்ட வாழ்வியலில் தனிமையிலே தடுமாறி, 
துளித்துளியாய் யுள்ளத்தில் சூழ்கின்ற துயரமதால், 
களிபொங்கச் சாவினையே கரங்கோக்கத் துடிதுடிக்கும், 
ஒளிர்வெளியி னிளையோர்உம் உயிரழிக்க ஏதுரிமை?

சொந்தமிலாக் கடவுளந்தத் துரும்பினிலோ அன்றியொரு 
கந்தமென மணக்கின்ற கவிதையிலோ இல்லையெனுஞ் 
சிந்தனையைத் தேர்ந்திருக்கும் தெளிவான உளங்களிலே
வந்துதிக்கும் வளந்தருகும் வாழ்வறந்தான் அறிவன்றோ?
=====================================================
அன்பன் 
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக