திங்கள், 17 அக்டோபர், 2022

இருப்பவர் உரையதை ஏத்திடுவோம்...

இறந்தவரின் நல்வரிகளை/ நற்கவிதையைப் போற்றுவது மிக உயர்வான செயலே!  இருப்பினும் இருக்கும் போதே தன் பாடல் வரிகள் போற்றப்படுவதைக் காண்கையிலே பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், ஒரு கவிஞனுக்கு வேறென்ன சிறந்த மகிழ்வை, எந்த விருது தரமுடியும்?
==========================================

==========================================
இருப்பவர் உரையினை போற்றுவோம்.....
==========================================
மின்னும் பாக்கள் மலரும் மாகடல்
பின்னும் பாவலர் பாடும் பாக்கடல்
சித்தக் கடலிலே சிக்கும் சிப்பிகள்;
எத்தனைச் சிப்பியில் இருக்கும் முத்து?

அருமைத் தமிழ்க்கரை அளையுமென் தமிழ்மனக்
கரங்களில் கிடைப்பதோ கிளிஞ்சலும் சோழியும்!
ஆழியாம் தமிழின் அலையிற் சிக்கிடும்
சோழியும் சங்கதும் சிறப்பாம்; சேருமக்
கவிதைச் சொல்லின் கிளிஞ்சலு(ம்) அழகாம்;
கவிகளில் எவர்க்கோ கிடைக்கும் புதையல்!

மொழிக்குக் கவிதை பழமைதா(ன்) ஆயினும்
உழலுமென் நினைவிலே வெறுமை; உண்மை!
கற்பனைக் கவிவளம் கவிஞனின் சொத்து;
விற்பனைக் கல்லவ் விளையும் முத்து!
ஆழ்கடல் செந்தமிழ் அறிஞரும் தமிழினை
மூழ்கியேத் தேடி முனையும் போதிலே,
சூழ்மலை முகிலெழி லழகினைச் சொல்கையில்
வாழ்விலே காணுமவ் வன்முறை சாடுவீர்!
கவின்மிகு கனவுலாக் காதலைச் சொல்கையில்
புவியினை யழித்திடும் போதையைச் சாடுவீர்!

மன்னுயிர் காத்திடும் மழைவளஞ் சொல்கையில்
இன்றையப் பெண்சிசு இனக்கொலைச் சாடுவீர்!
பாட்டி லுறைந்திடு பண்ணிசைச் சொல்கையில்
நாட்டின் மதம்வெறி நாசமுஞ் சாடுவீர்!
நாணுமத் தமிழ்மொழி நங்கையைச் சொல்கையில்
காணுமச் சமூகக் கள்ளமுஞ் சாடுவீர்!
கண்நிகர் முன்னோர் நன்னெறி சொல்கையில்
பண்பறு மாந்தரின் புன்னெறி சாடுவீர்!

பல்சுவை யுணவோ பூந்துகி லுடையோ
நல்லெழில் மனையோ நிறைவு தருமோ?
இருக்கையில் பாக்கள் இன்றே பெற்றிடும்
பெருமை ஒன்றே பாவலர்க் கனவாம்!
இறந்தநற் கவிஞரில் எழுத்தினை யென்றும்
நிறைவுடன் போற்றும் நிலையுட(ன்) இன்று
இருப்பவர் எழுதிய எழில்மிகு கவிதை
உரையதை ஏத்திடு(ம்) உயர்வது(ம்) செய்வமே!
===========================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக