திங்கள், 17 அக்டோபர், 2022

முழுநிலவே முத்தமிழே....

அன்னையொருவர் தன் மழலைக்காய், நந்தமிழிற் பாடுமொரு தாலாட்டுப் பாடல்....
==========================================

==========================================
முழுநிலவே... முத்தமிழே!
==========================
சின்னஞ் சிறுவிரலாற் றீண்டுமின்ப ஓவியமே!
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுக் காவியமே! 
மின்ன லொளிவீசும் மென்மழலைச் சொற்பதமே!
அன்பில் உருவெடுத்த ஆரமுதா மற்புதமே!

முக்கனியுஞ் சேர்ந்த முழுநிலவாம் முத்தமிழே!
சொக்குமெழிற்  றோய்ந்த தொடுவானச் சித்திரமே!  
மன்னுதமிழ் மாண்பாம் மரபென்னுஞ் சத்தழகே! 
பொன்நே ரிலக்கியப் பூந்துகிலாம் புத்தமிழ்தே! 

மடியில் தவழ்தெனை மயக்கிடும் மல்லிகையே! 
செடியில் சிரிக்குமென் தேனமுதச் செண்பகமே! 
கொடியி லாடுகின்ற கொன்றையின் பூமணமே!
பொடியாய்ப் பொலிகின்ற புல்லினிதழ் பூம்பனியே!

என்னிலே விளைந்தநல் லின்பத்தின் சிலையே!
கண்ணையே கவர்ந்திடும் கனவுலகின் கலையே!
தென்றலாம் காற்றிலே தவழ்நீ ரலையே!
பன்னீராய் மணந்திடும்  பழமுதிர் பொழிலே!

மழலைப் பருவத்தின் நித்திலச் சுடரே!
கழறும் விந்தையாம் கிளிமொழிப் பேச்சே!
வண்ணப் பொக்கை வாயிதழ் சிரிப்பிலென்
எண்ணக் கவலையை எரித்திடும் மருந்தே!
===================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக