செவ்வாய், 18 அக்டோபர், 2022

வருவானே நிச்சயம் வருவானே....

மழலையரோ, இளையவரோ, முதியவரோ, மகளிரோ, ஆடவரோ, கல்வி கற்றவரோ, கற்காதவரோ,பாவலரோ, படித்தவரோ, பண்பாளரோ, பற்றுள்ளவரோ, பற்றறுத்தவரோ, மந்தையுளம் கொண்டவரோ, அரசியலாரோ, ஆத்திகரோ, நாத்திகரோ எவராயினும் சரி அவன் வரும்போது எவரும்/ எதுவும் தடுக்க ஏலுமோ?
===================================









===================================
வருவானே நிச்சயமாய் வருவானே...
===================================

(எடுப்பு)
========
நாட்டுக்குள்ளும், ஊருக்குள்ளும்
வீட்டுக்குள்ளும், உறவுக்குள்ளும் 
காட்டுக்குள்ளும், கொட்டிமுழக்கி....                    (வருவானே)
வருவானே நிச்சயமாய் வருவானே!

(தொடுப்பு)
===========
அவனிங்கே உன்வாழ்வில் வருவானே;
தவறாமல் உனைத்தேடி வருவானே!    
அறுந்தாடும் வாலெனவே ஊழ்வினையால், 
இறுமாப்பில் நானென்றே அலைந்தாலும்,         (வருவானே)

(முடிப்பு)
=========
தடுத்தாலும் அரண்டிங்கே அழுதாலும், 
சொடுக்கினிலே தாள்பற்றி தொழுதாலும், 
வெடுக்கென்று மிரண்டிங்கே ஒளிந்தாலும்,
அடுக்கிச்சேர் செல்வத்தை அளித்தாலும்,           (வருவானே)

நடித்தாலும் தரைநோகத் துதித்தாலும், 
துடித்தாலும் சுள்ளென்றே மிதித்தாலும், 
கொடுத்தாலும் வேதனையில் கொதித்தாலும், 
வெடித்தாலும் கோடிதந்தே மதித்தாலும்,             (வருவானே)

கறும்பணத்தின் ஊழலிலே களிப்பவரின் 
அறமில்லா ஆட்டங்கள் சாய்த்துவிட,
திறனில்லா ஆட்சியரும் மீளாமல்  
உறங்கிவிழும் வேளையிலே உயிர்பறிக்க,          (வருவானே)

என்படத்தை என்பெயரை எழுதென்று,
மன்னரென ஆடுவோர்க்கும், தலைபொறித்தச்
சின்னத்தின் சிற்றெழுத்துக் கட்டளையால்,
மன்பதையில் உனைத்தேடி உயிரெடுக்க,          (வருவானே)

மழலைகளோ, முதியவரோ, கவிஞர்களோ, 
எழில்பூத்த நங்கையரோ, இளையவரோ,
பழந்தின்று கொட்டையிட்டத் தீயவரோ, 
கொழுப்பெடுத்தக் கொடுங்கோல ரானாலும்,  (வருவானே)

கருகருத்தக் கொம்புமிளிர் அணிநடை
எருமையதன் மீதேறி ஒருகரத்தில் 
திரிசூலம், மறுகரத்தில் உயிர்பறிக்கும்
பிரிபோன்ற பாசமதைச் சுழற்றியிங்கு                (வருவானே)
==============================================
இராச. தியாகராசன்

பிகு: 
அணிநடை எருமை = சங்கத்தமிழ் சொல்லாட்சி.
எமனின் பாசம் = உயிர்பறிக்கும் கயிறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக