வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கும்மியடிப் பெண்ணே கும்மியடி....

கும்மியடிப் பெண்ணே கும்மியடி.......
(வெண்டளையான் வந்த பன்னிருசீர்
விருத்தம்/ கும்மிப் பாட்டு)


====================================
















=====================================
(1)ஒன்றி யுணர்வுடன் உள்ள உயர்வுடன்
.....உண்மையும் ஓங்கிடவே
..........ஊழல் ஒழிந்தினி ஓங்கு புகழுடன்
...............உத்தமர் வாழ்ந்திடவே
(2)இன்று புவியினில் கள்ள மழிந்திடக்
.....கற்றவர் நேர்வழியில்
..........என்றும் நடந்திட வேண்டு மெனக்கரம்
...............கொட்டிநீ கும்மியடி!

(3)வண்ணம் மிளிர்ந்திடு மெண்ணங் கவர்ந்திடும்
.....வானவிற் கோலமதாய்
..........மண்ணி லிறங்கிடும் மாந்த ரனைவரின்
...............வாழ்க்கையும் ஆகுமென
(4)எண்ணி உளந்தனில் ஆம்ப லிலையதன்
.....மீதிரு நீரதுபோல்
..........இன்பம் துயரினை ஒன்றாய்க் கருதிட
...............வேண்டிநீ கும்மியடி!

(5)உள்ளம் எழுந்திடு மெண்ண முரைத்திடும்
.....உன்னதச் சாவியென
..........உண்மை எனும்மொழி ஒன்றே உலகினை
...............காத்திடுஞ் சாமியெனத்
(6)தெள்ளத் தெளிவுடன் அன்பு வழியினில்
.....மக்களும் நின்றுலகில்
.........சிந்தை நிறைவுடன் சீர்த்தி நலம்பெறப்
...............பாடிநீ கும்மியடி!

(7)அள்ளும் அழகுடன் ஆழ்ந்து கவிஞரும்
.....யாத்திடும் பாடலைப்போல்
..........அன்பின் அறமதன் பாதை நடப்பவர்
...............வல்லமை பெற்றுவிட
(8)வெள்ளை யுளத்துடன் காணும் அனைவரும்
.....நந்தமிழ்ச் சுற்றமென
..........விக்கல் வெறுமையின் துன்பந் தொலைக்கவே
...............ஆடிநீ கும்மியடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக