ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கடலம்மா.....

அன்பர்களே!

உலகளாவிய தடாகம் இலக்கிய வட்டத்தில், இந்த மொழியார்வலனின் ”கடலம்மா” கொச்சகக் கலிவரிகளை ஏற்றதுடன், கூடவே கவியருவி என்ற அடைமொழியும் அளித்தமைக்கு என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.   இதோ கடலம்மா பாடலின் முழுவரிகள்:
 
கடலம்மா! (கொச்சகக் கலிப்பா)
==============================================






 
 
 
 
 
 
 
 

===============================================
கருத்தறிந்தே சோறூட்டிக் காலமெலாம் தாலாட்டிக்
கரிசனமாய்க் கனிவுடனே காக்குமெங்கள் கடலம்மா;
உருக்கமுடம் கேட்பதுன்றன் உள்ளத்தைத் தொடவிலையோ?
செருக்கரெமைச் சிதைப்பதுன்றன் சித்தத்தில் படவிலையோ?

அன்னியரால் அழிகின்ற அவலத்தை வாக்குக்காய்
விண்ணளக்க வாய்பேசும் வீரரெமைக் காக்கவில்லை!
மண்ணகத்து மாந்தருமே வாழ்விக்க வரவில்லை:
உண்பதற்காய் உன்மடியில் உழலுமெங்கள் வாழ்வெதற்கு?

வாயில்லா விலங்கிற்கும் வாழ்வுதரும் மன்றங்கள்;
நோயில்லா வாழ்விற்கும் நூற்றளவில் மருத்துவர்கள்;
வாயிருந்தும் கதறிநிதம் மாய்கின்ற எம்மினத்தை
நீயுமின்று கைவிட்டால் நீதியெங்கே தான்கிடைக்கும்?

உனையெங்கள் தாயெனவே உணர்ந்ததனால் எந்நாளும்
கனவினிலும் காட்சியிலும் கடலுக்காய் வாழுகின்றோம்!
வனைந்தெம்மை பெற்றவர்உன் மலர்மடியில் விட்டதனால்,
சினந்தெமையே சிலநாளில் சீறினாலும், காப்பவள்நீ!

வேறுகதி இல்லாத வெறுந்தமிழன் என்பதனால்
சேறுபூசிச் சிரிக்காத திரையம்மா நீயன்றோ!
வீறுகொண்டே வெடித்தெழுந்து, வீழுமுன்றன் மக்களுக்கு
ஆறுதல்கள் தந்திடவே ஆற்றலுடன் வருவாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக