வியாழன், 21 ஆகஸ்ட், 2014

சீக்கிரமே வாயேண்டி....

சிங்காரி சீக்கிரமே வாயேண்டி....
(நாட்டுப்புற நடைப் பாட்டு)
==============================












===============================
சிங்காரி சீக்கிரமே வாயேண்டி...
===============================
மருதாணிச் செவப்பழகே;
மருக்கொழுந்து மைனாவே;
குண்டுமல்லிப் பூச்சரமே;
குறிஞ்சிப்பூ ரவிக்கக்காரி;
பஞ்சுமிட்டாய் சீலக்காரி;
பளபளக்கும் பல்லுக்காரி;
மல்கோவா மாம்பழமே; 
மலையாள மயக்குருவே!
மருதமல மயிலுபோல, 
பொழுதுகூவும் குயிலுபோல, 
புதுப்பொண்ணா சொலிக்கிறியே!
சிங்காரி தாகந்தீக்கச்
சீக்கிரமா வாயேண்டி!

அந்திமஞ்சள் வெயிலிலே,
பவுனாட்டம் மினுமினுக்குங் 
கண்டாங்கிச் சீலகட்டி,
கண்ணாடி வளசிணுங்க, 
கம்பங்காட்(டு) ஊடால, 
திருவாரூர் தேராட்டம், 
தலமேல புல்லுகட்ட 
சொமந்துநீ கையவீசி, 
சிலுப்பிகிட்டு நடக்கயில, 
கொல்லாம கொல்லுதடி 
கொலவெறியா ஊம்அழகு!
சிங்காரி தாகந்தீக்கச்
சீக்கிரமா வாயேண்டி!

காத்துவீசி தாவணியும் 
கனசோரா பறக்கயில, 
ஒதட்டோரச் சிரிப்புலயென்
உசிரையே வாங்குறயே!
தூண்டியில சிக்குறது
மீன்தான்னு தெரியுமடி;
என்னாயிது உன்னோட 
மீன்கண்ணு தூண்டியோடி?
தரமேல மீனாட்டந் 
தவிக்குதடி எம்மனசு;
சிங்காரி தாகந்தீக்க
சீக்கிரமே வாயேண்டி?
===============================
இராச. தியாகராசன்

பிகு: 
====
ஊடால - குறுக்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக