வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தந்தையெனும் பாசம்...

தந்தையெனும் பாசம்
(கொச்சகக் கலிப்பா)
===================================

















=================================================
தந்தையெனும் புதிர்
====================
அன்னையின் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்னல்கள் ஏதுமின்றி எந்நாளும் செழிப்புறத்தான்   
தன்னலமே தான்மறந்து தாரணியில் வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனைத் தீர்ப்பவரும் தந்தையன்றோ?

முழுதுமுணர் மாந்தர்களை, முற்றுபெற்ற இலக்கியத்தை
பழுதின்றித் தன்னன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவின்றி வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்திங்கே தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

அன்னையென்ற கட்டடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே!
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?

அத்தனைப் பாசத்தை, அற்புதமாய்ப் பரிவினையே
முத்தனையச் சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனையனையே
முந்திவந்துக் காத்திடத்தான் முனைந்தாலும், வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பமிடும் சீர்மையன்றோ!

நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து,

தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல்
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவெனக்
களந்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!
======================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக