புதன், 18 செப்டம்பர், 2019

பாவலர் தங்கமணி

சிவனருட் சிரோன்மணி, காலஞ்சென்ற பாவலர் திருமதி தங்கமணி அம்மையார் அவர்கள் என்னுடன் சேர்ந்து எழுதிய ஒரு பஃது வெண்பா மாலையில் அவரின் பங்கான வெண்பாக்கள். தற்போது, அவரெழுதிய வெண்பாக்களுக்கு பதிலாக நான் வனைந்தவற்றை சேர்த்திருப்பதால், அவரின் மேலான வரிகளைத் தனியாகவே பகிர்கிறேன்:
=====================================================




====================================================
நம்பீசன் நமைக் காப்பான் (பாவலர் தங்கமணி)
====================================================

நமக்கு மறைநாதன் நற்றாள்  துணையாம்
சுமக்கும்  வினையிடர் தூளாம்!-- இமைக்குள்
விழியின் ஒளியாய் விளங்கும் விடையோன்
எழிலார் திருக்கோலம் இன்பு. (5)

இன்னருளில் வைத்திடுவான் ஈசன் மறைநாதன்
புன்னகைக்கே ஈடாமோ பொன்னகைகள்?-- மன்னனவன்
காணும் உயிர்களைக் காத்திடுவான் அன்பினைப்
பூணும் அணியாய்ப் பொலிந்து. (6)

சிறப்போடு சீர்தரும் செங்கழலார் தாளால்
பிறப்பாகும் துன்பப் பிணிபோம்-- திறப்பாக
ஞான வழிகாட்டும் நம்பனை போற்றிடுவாய்
மோன குருபேர் மொழிந்து. (8)

மொழிக்கு வசமாவான் முந்துதமிழ் அன்பன்
கொழிக்கும் அருளைக் கொடுப்பான் -- பழிக்கும்
வினைக்கஞ்சி முப்போதும் வெண்ணீற்றன் அப்பன்
புனைகழல் வேண்டிப் புகல். (9)

புகலென் றுனதிரு பொற்றாள் பணிவார்
அகமன் றிலுனருளாம் ஆடல்! -- முகிலனும்
வேதனும் போற்றும் விமலா! எளியரைக்
காதலுறும் கண்மலரால் கா. (10)
====================================================
பாவலர் தங்கமணி அம்மையார்
====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக