வியாழன், 26 செப்டம்பர், 2019

முகநூல் வெண்பாக்கள்....

நந்தமிழை வளர்ப்பதனால், சமூக வலைதளத்தையும் இலக்கியமென்பேன் நான்.

==============================


==============================

குற்றமிலாச் செந்தமிழைக் கோதில்லாத் தோழமையைப்
பெற்றுதரு(ம்) இவ்விணையம் பேறென்றால் - சுற்றும்
முகநூலில் நாமிணைவோம் முத்தமிழால் என்று
பகர்தலே பைந்தமிழர் பண்பு.

தேடியுள(ம்) ஆய்ந்தழகாய்ச் சேர்ந்திடவே நம்மிளையோர்
நாடுவதோ நல்லிணைய நட்பன்றோ!  - வாடலில்லா
முத்தமிழும் அன்பும் முகநூற்(கு) அழகென்றே
சித்தமதில் கொள்வார் சிலிர்ப்பு.

அன்பு(ம்) அணிகலனாய் நட்பும் இருப்பதனா(ல்),
என்றும் முகநூல் இனிப்பென்றால் - இன்றிங்கே
சிந்தை சிலிர்க்கச்செய் செப்படி வித்தையென,
விந்தை முகநூல் வியப்பு.

தகவோர் தமையே சளைக்கா(து) இணைக்கும்
முகநூல் உலகின் மொழியென்றால் - அகவாழ்வில்
சூழ்மனிதர் பண்பினைச் சொல்லிடும் இந்நூலும்
ஆழ்ந்துணர்த்தும் ஆசான் அறி.

சிந்திக்க ஏலாத சிந்தனைச் சிற்பிகளும்,
முந்திவந்து மேயும் முகநூலில் - வந்தனைசெய்
நேர்மையொடு நீதிவழி நிற்பவர்க்கே எந்நாளும்
சீர்த்திகளும் சேர்தல் சிறப்பு.

================================================

இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக