வியாழன், 26 செப்டம்பர், 2019

கண்ணுறங்காய்....

இளையோருக்காய் ஒரு தாலாட்டு.  2002இல் எழுதி 2015இல் முகநூலில் பகிர்ந்ததாய் நினைவு.  இன்று இன்னொரு பத்தி சேர்த்து இங்கு பகிர்கிறேன்.  ஒரு தமிழ்த்தாய் தன் மகவிடம் கடமையைச் செய்யக் காலம் வருமெனச் சொல்லி, கண்ணுறங்கத் தாலாட்டிசைக்கிறாள்.
========================================
========================================
கண்ணே நீ கண்ணுறங்கு...
========================================
நேர்மைச் சீயெமெனத் தீதகற்றச் சீறுவைநீ - இன்று
.....நித்திலமே நறுந்தேனே கண்ணுறங்காய்;
சோர்வி லாதுவருஞ் சூழ்துயரம் மீறுவைநீ - இன்று
.....துங்கமணிப் பெட்டகமே கண்ணுறங்காய்;
கூர்மை நெடுவேலாய்ப் புன்னெறியைச் சாடுவைநீ - இன்று
.....கோதிழையே குஞ்சரமே கண்ணுறங்காய்;
ஆர்க்குந் தேன்சிட்டாய் நன்னெறியை நாடுவைநீ - இன்று
....ஆரமுதே அம்புலியே கண்ணுறங்காய்!

ஓர்மைப் பூங்குயிலாய்ப் பைந்தமிழைப் பாடுவைநீ - இன்று
....ஓங்கலனை ஒண்டமிழே கண்ணுறங்காய்;
சீர்மைத் தென்றலென மணம்பரப்பி யாடுவைநீ - இன்று
.....சித்திரமே செழுங்கனியே கண்ணுறங்காய்;
கார்போல் நந்தமிழைக் கையணைத்துத் தாங்குவைநீ - இன்று
.....கற்கண்டே கனியமுதே கண்ணுறங்காய்;
வேர்போல் நம்மொழியைக் காத்துநிதம் ஏந்துவைநீ - இன்று
....வெள்ளிநிலா வித்தகமே கண்ணுறங்காய்!
==========================================
இராச. தியாகராசன்.

பிகு:
====
சீயம் = சிங்கம், நித்திலம் = ஆணிமுத்து, துங்கமணி = ஒளிவீசும் மணி,
புன்னெறி = தீயநெறி, கோதிழை = நேர்த்தியான இழை, குஞ்சரம் = ஆனை,
ஓர்மை = தனிமை, ஒண்டமிழ் = ஒளிர்கின்ற தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக