சனி, 21 செப்டம்பர், 2019

எழுவின் மழவரே! எழுமின் எழுமின்...

ஒரு ழகரக் கவிதை வாழ்த்து....

=============================



=============================

அழுகுங் கழிவின் குழியைத் தொழுது,
நழுவி யுழல விழுந்து, பழியைத்
தழுவ விழையும் எழுவின் மழவரே!
அழிவின் சுழலில் நுழைந்து பழகி,
அழலி(ல்) ஒழுகி யழிந்து விழுமுன்
வழமை மொழியும் செழித்து தழைக்க,
உழவுத் தொழிலு(ம்) எழுந்து கொழிக்க,
மழலை கழறும் குழலின் பிழிவாய்,
அழகு(ம்) இழியும் பொழிலின் நிழலாய்,
விழிகள் தழுவ விழையு(ம்) எழிலாய்,
செழிவு வழிய வழங்கு பொழிவாய்,
பழைய சழக்கு முழுது(ம்) அழிய,
மழுவைத் தொழுகு(ம்) உழவுஞ் செழிக்க,
உழவின் மொழியா(ய்) எழுகும் மழையாய்,
பழியும் கழிய எழுமி(ன்) எழுமி(ன்)
பழன விழுவின் முழவும் முழங்கவே!

==============================
இராச. தியாகராசன்
==============================
பிகு:
கழறுதல் = கிள்ளை மொழி
சழக்கு = கயமை
மழு = கலப்பையின் கொழு
எழுவின் மழவர் = தூணொத்த இளையோர்
அழலில் ஒழுகி = நெருப்பொடு இணைந்து
பழன விழு = வயலின் சிறப்பு
முழவு = முரசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக