வியாழன், 19 செப்டம்பர், 2019

அந்திமகளின் சிலிர்ப்பு....

ஒரு பஃது வெண்பா அந்தாதி மாலையொன்று எழுத நினைத்தேன். சற்றே நினைவு சறுக்குகிறது துயிலால். எனவே முதலில் ஏழு அப்புறமாக மீதி மூன்று வெண்பாக்கள்! அடிவானப் பேரழகைக் கண்டேன், அதனால் எழுந்த நினைவுகளின் தாக்கம் இவை:
======================================





==============================================

கண்மலரும் பூத்திருக்கக் கண்டேனே வைகறையாம்
வெண்பனிப்பூ தூவுகின்ற வேளையிலே - விண்மகளும்
தண்கரத்தால் ஆதவனைத் தானெழுப்பிக் கூடுகின்ற
வண்ணமயக் காட்சியதை யே!
ஏகமனப் பெண்ணை அணைத்துக் கதிரவன்தேன்
பாகெனவே முத்தம் பதிக்கையிலே - மோகம்
கவிந்த அடிவானம் கண்கள் கிறங்கிச்
சிவந்தே சிலிர்க்கும் சிரிப்பு!
சிரிக்கு மெழில்வானச் சித்திரமென் உள்ளத்தில்
விரிக்கின்ற எண்ணங்கள் விந்தை! - சுரிதகமும்
அம்போ தரங்கமும் ஆர்க்கும் வரிகளிலே
எம்பாட் டெழுதுவனோ இன்று?
இன்றென் னுளம்பற்றி எந்தமிழில் சொல்லெடுக்க
அன்றென் கவிவடிவாய் ஆனவளே! - உன்றனெழில்
விண்டகணம் மின்னல் விரிந்தொளிரும் நெஞ்சகத்தில்
தெண்டிரையாய்ப் பொங்குதே சிந்து.
சிந்தும் சிறுதீச் சிவப்பின் துகிலெனவே
அந்திமகள் கட்டும் அடிவானம்! - சிந்தைகவர்
வானகமே செஞ்சாந்து வண்ணமென ஆனதையே
தானிங்கு பாவடித்தேன் சற்று.
சற்றும் தளராத சாத்தானாம் பேருருவைப்
பற்றிய விக்கிரமன் பாடனெவே - முற்றும்
மயக்கும் தொடுவான வஞ்சியெழில் கண்டு
முயலுமென் பாட்டின் மொழி.
மொழியும் தமிழில் முனையும் வரியில்
பொழிலின் கவிதை புனைந்தேன்! - எழிலார்
இயற்கை விரிக்கின்ற இன்பஞ்சேர் காட்சி
நயமொன்றில் நானும் நனைந்து.
நனைத்திடும் தேறலாய் நாவில் இனிக்கும்
கனவெழிற் கற்பனை காட்சி! - மனிதர்
எவரும் எழுதா எழிலுரு என்றன்
கவியில் முளைத்த கரு.
கருக்கலும் அந்தியும் காதற் கனவாய்
வரமெனப் பாட்டில் வழியும்! - அரக்காய்ச்
சுவைப்பவர் நெஞ்சிலே தீட்டும் அமுதக்
குவையாய் அழகின் குளிர்
குளிர்வளி காலையில் கூரெனத் தைக்க;
பளிக்கென ஆதவன் பாரை - அளக்குமிம்
மாணப் பெருநில வாரிதிக் காட்சியைக்
காணக் கிடைத்ததே கண்.
======================================
வேறு:
======
துள்ளி யெழுந்திடும் பொங்கு திரைக்கடல் சூழ்வதுபோல்
அள்ளித் தருந்தமிழ் ஆற்றல் வளர்த்திடும் ஆர்வமுடன்
தெள்ள முதச்சுவை பொங்க நறுங்கவி செய்திடவே
உள்ள முறைந்தெனை யென்றும் உயர்த்திடும் ஒண்டமிழே!

=====================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக