சனி, 21 செப்டம்பர், 2019

வேண்டுதல்கள்.....

என்னுளத்தின் வேண்டுதல்கள்.....
==========================
==========================
ஆவி விட வேண்டுமடி...
==========================
இற்றைக்கு ஒருகனவாய்,  இனம்புரியா உணர்வாய், 
முற்றுபெற நெஞ்சகத்தில் முளைத்தெழுகும் நினைவு; 
சுற்றமும் இங்கில்லை; குற்றமும் இங்கில்லை;
உற்றவர் எவருமில்லை? கற்றவரும் எவருமில்லை!

புயலெனவே புந்தியதில் பொழுதெல்லாம் புகுந்தென்றன்
இயல்பினையே பறித்தழிக்கும் எண்ணமதை எரித்தழிக்க
வியனுலகைக் காக்குமந்த வித்தகியைத் தானிறைஞ்சி
நயந்தொழுகும் நறுங்கவிதை நவில்கின்றேன் நானிங்கு!

சூலத்தை ஏந்தியே சூக்குமத்தால் ஆட்டுமவள் 
கோலத்தைக் கண்டுமனக் கூத்தாடு மேடையிலென்
காலத்தை நான்கணித்தே காணுகின்ற வித்தையெனும்
ஞாலத்தின் மெய்யான ஞானத்தை வேண்டுகிறேன்!

அத்தனவன் பின்னலெனும் அகன்றபெரு மாழியிலே, 
நித்தமும்நான் விழுந்தே நீந்திடும் வேளையிலே, 
சித்தமதைச் சிலந்தியெனச் செரித்தே அரிக்கின்ற
பித்தமதை வேரறுக்கும் பேறதனை வேண்டுகிறேன்!

கண்களிலே வைத்தென்றும் காக்கின்ற இறையுணர்வும்,
எண்ணமதை என்றென்றும் இயக்குகின்ற எந்தமிழும்,
உண்மையொளிர் உயிர்நட்பாம் உன்னதமும்;  ஆழ்துயிலில்
விண்ணகரப் பேரின்ப விடுதலையும் வேண்டுகிறேன்!

பூவிலை மீதொட்டாப் பூந்துளியாய் வாழ்கையிலே,
நாவினிக்கும் பாரதியாய் நற்றமிழில் பாவெழுதி,
தேவியவள் சேவடியைச் சீந்துகின்ற நினைவுடனே
பூவிதழ்கள் அவிழ்வதுபோல் ஆவிவிட வேண்டுகிறேன்!
===============================================
இராச. தியாகராசன்

பிகு:
====
புந்தி - புத்தி, நவிலுதல் - உரைத்தல், சூக்குமம் - சூட்சுமம், அத்தன் - ஆதியோகி, 
ஆழி - கடல், விண்ணகரம் - வீடுபேறு, சேவடி - சேவிக்கும் திருவடி, 
சீந்தும் - போற்றும்,  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக