சனி, 21 செப்டம்பர், 2019

என்னைக் கவர்ந்த தமிழேறு...

பாவேந்தரின் புதல்வர், தமிழ்மாமணி, திரு மன்னர்மன்னன் அவர்கட்காக, அவருடைய 75 ஆண்டு கால தமிழ்த் தொண்டைப் போற்றி,  நான் வனைந்த பாடலிது.

=======================================





=======================================

மென்மைச் சிரிப்பினில் வென்றிடு மன்னவ!
கன்னற் றமிழில் கவிமொழி - மின்னிடும்

மன்னு(ம்) உரைகளால் வண்டமிழ்ச் சொற்களால்
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

பாவேந்த(ர்) உள்ளமே பாட்டுப் பறவையாய்,

மூவேந்தர் முத்தமிழ் முன்னெடுத்தாய்! - நாவேந்து(ம்)
அன்னைத் தமிழில் அரசர்க்(கு) அரசநீ
என்னைக் கவர்ந்ததமி(ழ்) ஏறு.

நெஞ்சக் கதவில், நிமிரும் நினைவுகள்;
கொஞ்சு தமிழிற் கொடுத்தவான் - மஞ்சு!

பனியா(ய்) இலக்கியப் பாங்கின் படைப்பா(ல்),
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

கறுப்புக் குயிலின் குரலாம் நெருப்பைச்

சிறக்கச் செதுக்கிய சிற்பி! - தெறிக்குந்
தனித்தமிழ்க் கொண்டலுன் சங்கத் தமிழால்
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

இயற்கையைப் பாடி, இயற்றமிழ்ப் பாடி,

நயத்தகு பெண்கல்வி நாடி - உயர்ந்தாய்!
வனையும் வரியால், வளர்தமிழ் பொங்க,
உனையிவண் போற்றுவே(ன்) ஓர்ந்து.

முரசாய் ஒலிக்கும் முதுபெரு(ம்) அறிஞ,

தரிசாய் விரிந்த சழக்கே - எரிய
முனைந்தே எழுப்பிய முத்தமிழ்ச் சுவர்கள்*
உனைநிதம் போற்றுமே ஓர்ந்து.
=======================================
இராச. தியாகராசன்
=======================================
கீழ் வரும் சொல்லாட்சிகள் பெரியவரின் படைப்புகளில் சில.

கறுப்புக்குயிலின் நெருப்புக் குரல்

நெஞ்சக் கதவுகள்
நிமிரும் நினைவுகள்
பாவேந்தர் உள்ளம்
பாட்டுப் பறவைகள்
பாவேந்தர் இலக்கியப் பாங்கு.
*இவர் தலைவராய் இருக்கும் போதில், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் கட்டடம் எழுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக