வியாழன், 19 செப்டம்பர், 2019

கரிமுகனே அருள்வாய்....

2019ஆம் ஆண்டு கணேசப் பண்டிகை நாளில், கரிமுகனை நினைத்து நானெழுதிய கட்டளைக் கலித்துறை வரிகளிவை!
==================================


==============================
கரிமுகனே அருள்வாய்.....
(கட்டளைக் கலித்துறை....)
==============================
புத்தி யெனுமெழில் தேவி யணைத்திடும் புத்தமுதே;
சித்தி யெனு(ம்)அகம் தேடி வணங்கிடுஞ் சித்திரமே;
வித்தை களைநிதங் கோடி கொடுத்திடும் மெத்தறிவே;
நித்த மெனதுளம் பாட விரும்பிடும் நித்திலமே!
அல்ல லனைத்தும் நொடியி(ல்) அகற்றிடு(ம்) அற்புதமே;
கல்வி யதன்வழி செல்ல வரந்தருங் கற்பகமே;
சொல்லி லடங்கிட ஏலா நலந்தருஞ் சொற்றிறமே;
பொல்லல் நுவணை யிலையடை ஏற்றிடும் பொற்பதமே!
முல்லை மலரை முனைந்தே யணிந்திடும் முத்தமிழே;
மெல்லும் பெருதுயர் துன்பந் தொலைத்திடு வித்தகமே;
எல்லை யெதுவும் வரையா(து) அருளு(ம்) எழிலுருவே;
கல்லின் சிலையாய்க் கவிதை தருகுங் கரிமுகனே!
================================================
இராச. தியாகராசன்
==========================
நித்திலம் = ஆணி முத்து.
பொல்லல், நுவணை, இலையடை இவையாவும், இன்னும் கொலை, பிட்டு, அப்பம், கொழுக்கட்டை என்பன கூட, தமிழர்கள் செய்து படைத்துண்ட பணியாரங்கள்.

மேலிருக்கும் படம், புதுவையின் அருள்மிகு மணக்குள விநாயகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக