சனி, 21 செப்டம்பர், 2019

எனக்கான ஆசைகள்...

ஆசையிலா மாந்தரெவர்?  ஆசையின்றி வாடுதலில்லை; வாடுதலின்றித் தேடுதலில்லை; தேடுதலின்றி நாடுதலில்லை; நாடுதலின்றிக் கூடுதலில்லை; கூடுதலின்றிக் குவலயமே இல்லை!
===================================


==================================
எனக்கான ஆசைகள்....
===================================
எந்நாளும் எழிற்கவிதை நானும் யாத்தே
....எத்திக்கும் எந்தமிழை வளர்க்க வேண்டும்;
கந்தமெனக் கமழும்பா வெழுதி நாளும்
....கயமைகளைக் கவித்தீயில் பொசுக்க வேண்டும்;
நொந்தலையும் நாதியிலாப் பேர்க ளிங்கே,
....நோதலற வாழப்பாப் புனைய வேண்டும்;
புந்தியிலே புகுந்தென்னைக் காக்கும் வாணி
....புகழ்நானும் பைந்தமிழில் வனைய வேண்டும்!

எழிலாரும் இயற்கவிதை பாட வேண்டும்;
....இனிமைதரு(ம்) ஏழிசையும் கூட வேண்டும்;
அழகாரும் அருங்கவிதை பாட வேண்டும்;
....அன்பென்னும் அற்புதத்தைத் தேட வேண்டும்;
பழகுதமிழ் சொல்லெடுத்தே பாட வேண்டும்;
....பன்னூறாய்ப் பண்ணலங்கல் சூட வேண்டும்;
விழைகின்ற காதலையும் பாட வேண்டும்;
....மேதினியோர் என்கவிதை நாட வேண்டும்!
=========================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக