வியாழன், 26 செப்டம்பர், 2019

மாயமென மாற்றுவளோ?.....

(பிகு: கீழிருக்கும் ஓவியம், தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான திரு இளையராஜாவின் கை வண்ணம்)

=======================================

=======================================
மாயமென மாற்றுவளோ....
=======================================
மதமதக்கும் மனச்சோர்வை மாற்றிவிடும் மந்திரக்காரி;
சுதியேற்றிச் சுழலவைக்கும் சுகந்தமணச் சுந்தரக்காரி;
சதமாயென் நெஞ்சகத்தில் தகதகக்கும் தந்திரக்காரி;
இதந்தருகும்  இன்பமதை ஏற்றிவிடும் இங்கிதக்காரி;

கதகதக்கும் கங்கனையக் கனல்மொழியின் கந்தகக்காரி;
விதவிதமாய் அணைத்தென்னை விழுங்குகின்ற வித்தகக்காரி;
செதில்செதிலாய் என்னுளத்தைச் செதுக்கின்ற சித்திரக்காரி;
புதுமையெனும் புத்தமிழ்தாய்ப் பொலிகின்ற புன்னகைக்காரி;

உதயத்தின் ஒண்மையென உணர்வூட்டும் ஓவியக்காரி;
கதலியதன் தேன்நிகர்த்த கனிச்சுவையின் காவியக்காரி;
வதம்செய்யும் வார்த்தைகளால் வாட்டுகின்ற வாக்கியக்காரி;
நுதலென்னும் பெருமீனால் நுழுகின்ற  நூதனக்காரி!

அன்பின்றி எதற்கிந்த அவலமென்றே அழுகையிலே,
என்வாழ்வில் நான்தளர்ந்(து) இடிந்தோய்ந்து விழுகையிலே,
உன்மத்தம் பிடித்தவன்போ(ல்) ஓடித்தேய்ந்(து) எரிகையிலே,
பின்னல்க(ள்) என்வாழ்வில் பேதமையாய்ச் சிரிக்கையிலே,

அவலத்தில் நானிங்கே அடுக்களையி(ல்) எரிவதுபோல்,
கவலைக(ள்) அடுக்கடுக்காய்க் கவிந்தெரிக்க என்னிதயம்,
சவலையெனச் சத்தில்லாச் சருகெனவே பறக்கையிலே,
இவளிங்கே ஏந்தியெனை இன்பத்தேன் ஊற்றுவளோ?

பொள்ளுகின்ற வாழ்வியலில் போக்கற்ற தருணத்தில்,
கள்ளமற இயல்பெழிலாய்க் கைக்கோத்து வருகுவளோ?
வெள்ளமென வெறுப்புநிலை வெளிப்போந்து வெடிக்கின்ற,
உள்ளமதே உடையாம(ல்) உடனிருந்தே ஆற்றுவளோ?

ககனத்தின் கடுவிசையாய்க் காற்றுவெளிக் காட்சியென,
சிகரத்தின் சீதளமாய்ச் சில்லித்த நெஞ்சகத்தில்,
தகவின்றி அலைகின்ற தத்தாரிச் சிந்தனையை,
அகமலர்ந் தன்புடனே அருகிருந்து தேற்றுவளோ?

தனிமையெரி வேளையிலுந் தன்மடியி(ல்) எனையிருத்தி,
பனித்துகளின் சாரலெனப் பற்றியெனைக் காதலுடன்,
கனிச்சுவையா(ய்) இனிக்கின்ற கற்கண்டுக் களிப்பூட்டி,
மனச்சோர்வைக் கணப்போதில் மாயமென மாற்றுவளோ?

======================================
இராச. தியாகராசன்.

பிகு:  நுதல் = புருவம் / நெற்றி
            நுழுதல் = விழுங்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக