சனி, 21 செப்டம்பர், 2019

விடியலே வாராதோ?.....

சில நேரங்களில் சந்தோஷம், சில நேரங்களில் சிந்தனை, சில நேரங்களில் உன்மத்தம், இன்னும் சில நேரங்களிலோ அறமென்னும் சீற்றம்;  வெறுங்கனவே வாழ்வாமோ;  விடியல்களே வாராதோ?
============================================
============================================
விடியலே வாராதோ...
============================================
ஆர்ப்பரிக்கும் ஆசையென அடித்தளத்தின் ஓசைகள்;
சேர்க்கின்ற சிக்கலெனச் சீற்றமுணர் சிந்தனையால்,
பார்க்கின்ற காட்சியெனும் பாலைவன வெக்கையிலே
நீர்க்கின்ற நியாயங்கள்; நிலையில்லா நினைவுகள்;

கேட்கின்ற கேள்விகளால் கிளர்ந்தெழுகும் கோணலதை,
ஆட்கொள்ளும் அவலநிலை; ஆரிங்கே நீதிசொல்வார்?
சிறகுகளும் சிதைந்தபின்னே சிகரங்களைத் தொடுவேனா?
செவியழிந்து போனபின்னே சங்கீதம் படிப்பேனோ?

கால்மடங்கி உடைந்தபின்னே கனசோராய் நடப்பேனா?
சால்பழிந்த சாய்க்கடையில் சான்றின்றி மறைவேனா?
கண்களின்றி கலைகளையே கருக்காக வளர்ப்பேனா?
விண்ணரகப் பேரின்ப விடுதலையைப் பெறுவேனா?

இத்தனைப் பேரிருந்தும் வழிநிறையுந் தனிமையிலே
சத்தில்லாச் சருகெனவே செரித்துவிழும் நினைவலைகள்;
சுழன்றாடும் இதயத்தில் சூழிருளாம் கருக்கலிலே
கழன்றோடும் காலங்கள்; கானல்நீர்க் கோலங்கள்!

நிழலெனவே நிதமலையும் நெஞ்சகமும் நினைவின்றி
கழன்றொருநாள் ககனத்தில் காற்றாகக் கலந்துவிடும்;
பழகுசுகம் படித்திடவே பறக்கின்ற பாழ்மனமும்,
உழலுகின்ற உலகமிதை உதறிவிடும் நாள்வருகும்!

வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனத்துள்ளே மங்கையவள் மாயங்கள் மருகிநிதம்,
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுறுமோ?

தினந்தினமும் தீக்குளியல்; தீராத மூச்சடைப்பு;
இனம்புரியா நெஞ்செரிச்சல்;  ஏனிந்த விளையாட்டு?
அறுந்தநூல் கையிலெனும் முடிவுகளே வாழ்வாமோ?
வெறுங்கனவாய் வாழ்விருக்க, விடியல்களே வாராதோ?
===========================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக