செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கனவு காணுங்கள்.....

பாவலர் கலாவிசு அவர்களின் ”கவிதை வானில்” அமைப்பு நடாத்திய பாவரங்கில் நான் பாடிய கவிதை வரிகள்.
=========================================













=========================================
கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)
====================================

சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்
சுற்றிநிலங் காடுமலை சூழ்ந்திருக்கும் பேராழி
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!

நாற்றிசையும் ஆளுகின்ற நம்பரிதிச் செம்படராய்
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்
வீற்றிருந்து நன்னலங்கள் மீட்டிடவே கீழ்த்திசையில்
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!

மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே
எண்ணியதை ஓர்முகமாய் ஏற்றிங்கு வாழ்கையிலே
விண்மீனாம் மாந்தரிலே மேன்மையுற்ற இந்தியர்நாம்;

மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா கலாமவர் 
தாழுதலில் தன்னுரையாய்த் தந்திட்டார்? இல்லையில்லை!

நீணிலத்தில் காணுகின்ற நேரறிவைத் தம்வாழ்வில்
வாணுதலின் நங்கையவர் கல்வியதைத் தம்வாழ்வில்
தேன்நிகர்த்த நந்தமிழின் மேன்மையதைத் தம்வாழ்வில்
வானகத்துக் கல்வியினை வளர்ப்பதையே தம்வாழ்வில்

எந்நாளும் ஒற்றுமையாய் இருப்பதையே தம்வாழ்வில்
சிந்தைகுளிர் நூல்களுறை சீரறிவைத் தம்வாழ்வில்
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து
விந்தைவெளி மண்டலத்து வீரரெனத் தம்வாழ்வில்

ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;
சீர்த்தியதும் வாழ்வியலில் தேடித்தான் வந்தாலும்
ஊருனக்குத் தூற்றுதலைச் சேறெனவே தந்தாலும்
தேர்ந்தெடுத்த நேர்க்கனவைச் சீர்க்கனவாய்ப் போற்றுகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக