புதன், 8 ஆகஸ்ட், 2012

நச்சரவை மாய்ப்பதெவர்?......


எங்கள் புதுவையில் இருந்து எங்கும் ஒளிவீசி, தமிழ் போற்றிய, இலக்கணச்சுடர், தீந்தமிழ்க் காவலர், இன்னிசை வித்தகர், சிந்துப்பாடலுக்கு முதன்முறையாக இலக்கணம் கண்ட மூத்தவர், முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் மறைவிற்கான  நினைவேந்தலில், உளம்நொந்து யாத்தளித்தப்  பாடலிது:
=================================================

=================================================
நச்சரவை மாய்ப்ப தெவர்? (நேரிசை வெண்பாக்கள்)
=================================================

செஞ்சாந்து வண்ணமெனத் தீந்தமிழில் சொல்லெடுத்து
அஞ்சாத போர்முரசாய் ஆர்த்தீரே! – நஞ்சுமிழ்ந்தே
நந்தமிழை சாய்க்கின்ற நச்சரவை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

விருதுகளைத் தேடும் வியனுகலில் ஊதிச்
சருகெனவே தள்ளிவிட்ட சான்றோய்! – திருமுருக;
செந்தமிழைச் சீரழிப்போர் சிந்தனையை ஈங்கினிமேல்
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எருமையென்றே நந்தமிழர் ஈங்கிருப்பைக் கண்டே
வருந்தியதால் விட்டீரோ வாழ்வை! – திருந்தாது
சந்தப்பா வென்றே தமிழடுக்கும் வெறுமையினை
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

எம்போன்றோர் கற்றிங்கு யாக்கின்ற சொல்லடுக்கை
செம்மையுற செய்துவிட்ட செவ்வேளே! – எம்பாட்டில்
முந்திவரும் பாப்பிழையை முன்னின்(று) உமைப்போலே
எந்தமிழால் மாய்ப்ப தெவர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக