வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அன்பின் வள்ளல்....

31.10.2010அன்று புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பும், இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம், தஞ்சையும் இணைந்து திங்கள்தோறும் நடாத்தும் நாடக, கவிதை, பாராட்டு விழாவில், நடைபெற்ற கவிதைப் போட்டில் பரிசு வென்ற என் கவிதை. கட்டமைப்பு எண்சீர் விருத்தம்.
===========================================
===========================================
அன்பின் வள்ளல் அன்னை தெரேசா (எண்சீர் விருத்தம்)
===========================================
தாழ்ந்தவரை தம்மைந்தர் எனவே எண்ணி
…..சலிப்பின்றி உழைத்திட்டத் தொண்டின் செம்மல்!
ஏழ்மையினர் தாமுற்ற துன்பங்  கண்டே
…..எழுந்துள்ளம் உருகிவிட்ட அன்பின் வள்ளல்!
வாழ்வியலில் தாம்பெற்ற மேன்மைக் கல்வி
…..மாந்திரினம் உய்ந்திடவே தந்த செல்வி!
வீழ்ந்தவர்கள் வாழ்வதனில் விடிவைக் காண,
…..விடிவெள்ளி போலுதித்தச் சேவைக் கன்னி!

சற்றும்தன் மனந்தளரா முகில தற்கு
…..தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் பேதம் முண்டோ?,
வற்றாத கங்கையது பார தத்தின்
…..மண்மேலே பாய்ந்துநலம் தருதல் போலே
மற்றவர்கள் தொடத்தயங்கும் தொழுநோ யாலே
…..வளங்குன்றி வாடுகின்ற மனிதர் தம்மை
பெற்றெடுத்தத்  தன்குருதி மக்கள் என்றே
…..பேணுகின்ற சால்பதனை நேரில் கண்டோம்!

அன்னியராய் இருந்திடினும் கருணை வெள்ளம்;
…..அன்பதனால் இந்தியரை ஆண்ட உள்ளம்!
தன்மனத்தால் தூய்மையொன்றே நினைத்த வாய்மை;
…..தன்னலமே கருத்தின்றிக் கொடுத்த தாய்மை;
முன்னின்று களமிறங்கி மற்ற வர்க்கும்
…..முன்னோடி என்றிவரும் உழைத்த தாலே,
நன்னெறிகள் பூண்டிலங்கும் தெரெசா உன்னை
…..நாடெங்கும் போற்றுகிறோம் அன்னை யென்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக