சனி, 4 ஆகஸ்ட், 2012

மனம் போன போக்கில்.....

ஆற்றாமையால் விளைந்த தரவு கொச்சகக் கலிப்பா
================================================

================================================

தான்போன போக்கினிலே தானாட்சி செய்தவரும்
காண்கின்ற நோக்கினிலே கானாட்சி கண்டவரும்
மாண்டபின்னே மீளெழுந்து மறுபடியும் வந்ததுண்டோ?
சீண்டுகிறார் வீணாக சீற்றமிகு சிங்கத்தை!

சீயமனை சிறுவர்களும் தீயினிலே வேகையிலே
தாயகத்தை நாடியவர் சாய்ந்தோய்து போகையிலே
தூயவழிப் பாதையிலே, துயரவொலி கேட்குதம்மா
நேயமனம் ஏங்குதம்மா; நீள்மூச்சு வாங்குதம்மா!

ஆடுமயி லற்புதங்கள் அவரிங்கே கேட்கவில்லை;
கூடுகளாய் மனிதமன கோணலையும் ஏற்கவில்லை;
நாடியவர் கேட்பதெல்லாம் நாமுண்டென் றாறுதலாய்
கூடியொரு நல்லவரின் குரல்வேட்டு குமுறலையே!

பாடுகின்ற பகல்வேஷ பாராட்டும் பட்டயமும்
கோடிகளாய் மாலைகளும் குரங்கெனவே தலையாட்ட
வேடிக்கை மனிதர்களும் வீரசூர பம்மாத்தும்
வாடிக்கை ஆனதென்ன! வண்டமிழால் வாழியவே!!!

கோதான கூட்டணியை, கோபுரமாய்ப் பதவிகளை
நூதனமாய்ப் பெறுவதற்கும் நோக்கின்றி வாழ்வதற்கும்
ஆதிமுதல் அடிப்படையே அரசணைதான் எனும்போது
நீதிநெறிக் குகந்தயிடம் நீறிறையும் சுடுகாடோ?

வேதனைகள் ஆங்கெதிரில் வெடித்தெழுந்து மறித்தாலும்;
சோதனைகள் பன்னூறாய் சூழ்தங்கு நெறித்தாலும்;
ஆதரவாய் நாமிருக்க அச்சத்தை விட்டொழிப்போம்;
சோதரனாய் நாமவரின் சோகத்தைச் சுட்டெரிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக