செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வென்றிடுவோம் புத்துலகை.......

உலக அன்பிற்கான நாளின்று.  கவிஞன் என்றான பின்னே காதலைப் பற்றிக் கவிதை பதியாமல் இருப்பது எப்படி?  இன்றுதான் கணினி/ இணையம் என்பதால், மீள்பதிவாக, இற்றைக்கிருக்கும் நிலையை எண்ணி.....
 ========================================

========================================
வென்றிடுவோம் புத்துலகை. 
(கலிவெண்பா)
========================================
தேனமுதத் தெள்ளுதமிழ்த் தீஞ்சுவையைத் தோய்த்திங்கே
வானளக்கும் வார்த்தைகளால் வாய்ப்பந்தற் றோரணமாய்க்
கானலெனும் காட்சிகளைக் காஞ்சனமாய்ப் பாட்டெனவே
தானளந்து சொல்லடுக்கும் சந்தமிழை பாவலரே!

அன்றலர்ந்த ஆம்பலினை ஆசையுடன் பாடுகையில்;
வன்முறையே வாழ்வென்போர் வஞ்சகமும் சாடுங்கள்!
தென்றலிழைப் பூங்காவை செந்தமிழிற் பாடுகையில்;
புன்மையினைப் போற்றுகின்ற புல்லரையும் சாடுங்கள்!

விண்ணளக்கக் காதலதன் மேன்மையினைப் பாடுகையில்;
பெண்சிசுவைக் வேரறுக்கும் பேதமையும் சாடுங்கள்!
பண்ணழகை, பாவலரை, பாவையரைப் பாடுகையில்
மண்ணுலகின் போதையெனும் வாதையினைச் சாடுங்கள்!

நந்தமிழின் மண்ணழகும் நாமணக்கும் பண்ணழகும்
சிந்தனையைக் கீறுகின்ற சீரியதோர் சொல்லழகும்
புந்தியிலே வைத்திங்கு போர்க்களத்தில் வெல்வோமே
செந்தழலின் பாட்டெடுத்தே சென்று!
==========================================
இராச தியாகராசன்

பிகு:
====
காஞ்சனமாய் = தங்கமென
சந்தமிழை = சந்தம் இழைகின்ற
ஆம்பல் = ஆம்பல் மலர்
புந்தியிலே = அகத்தினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக