செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தேவதை எங்கே?......

உங்களால் தேமா/ புளிமா/ இப்படித்தான்  செய்யுளாக எழுதமுடியும்.  திரைப்படப் பாடல்கள் போல எளிமையாக  எழுத இயலுமா என்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் ஒருவர் சவால் விட்டார்.  அவருக்காக எழுதிய சந்தப்பாடலிது.   இன்னொன்றும் சொல்கிறேன்.  மரபுக் கடை மிகவும் பெரியது;  அதில் கடினமான, எழுத்தெண்ணி எழுதும் கட்டளைக் கலித்துறையும் உண்டு.  எளிமையான, ஓட்டமுள்ள குறள் வெண் செந்துறையும் உண்டு.
============================================================

============================================================
தேவதை எங்கே (சந்தப் பாடல்)
============================

எடுப்பு (பல்லவி)
===============
இனியவளே! என்னவளே! இன்பம் இறைப்பவளே! – என்றன்
கனியவளே! கருத்தில்  கலந்தவளே!

தொடுப்பு (அனுபல்லவி)
======================

தண்மை இறைக்கின்ற என்னருமைத் தென்றல் காற்றே!
என்னை எரித்திங்கு நாளும் சுடுவதென்ன?

முடிப்பு (சரணம்)
================

பாடு கின்ற பாடலிலும்
…..பாவை வரும் பாதையிலும்
தேடு கின்ற தேவிமுகம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! – நிதம்
…..தோன் றியெனைக் கொல்கிறதே! (பாடுகின்ற)

கூவு கின்ற கருங்குயிலே,
…..கூத் தாடும் மயிலழகே!
தேவ தையைக் கண்டாலே
…..தேடு வதைச் சொல்வீரோ? – நான்
……தேடு வதைச் சொல்வீரோ? (பாடுகின்ற)

சூடு கின்ற மலர்சரமே,
…..சுழ லுகின்ற அலைக்கரமே
ஓடு கின்ற காலமிதை
…..உணர்ந் திடவே சொல்வீரோ? – அவள்
…..உணர்ந் திடவே சொல்வீரோ? (பாடுகின்ற)

அல்லி யவள் செவ்வாயின்
…..அமிழ் தனையச் சொல்லெல்லாம்
புல்லி னிதழ் மேலான
…..பனித் துளியாய்ப் போனதடி! – வெண்
…..பனித் துளியாய்ப் போனதடி! (பாடுகின்ற)

கனவி னிலும் அவளுருவே
…..காணு கின்ற காட்சியென,
நினைவி னிலே நிழலாடி
…..நெஞ் சமதே தொலைந்ததடி! -என்
…..நெஞ் சமதே தொலைந்ததடி! (பாடுகின்ற)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக