புதன், 8 ஆகஸ்ட், 2012

தாய்மை.......

தாயவளின் நெஞ்சுக்கும் உண்டோ நிகர்.....
=========================================

=========================================
அன்பிற்கும் உண்டோ அணை?
(நேரிசை வெண்பாக்கள்)

===============================
உயிரதனைச் சேர்த்தே உதிரப்பா லூட்டி, 
துயிலதுவுந் தான்மறந்து துன்பம் – நயத்தன்பால் 
தன்மக்கள் மேன்மைத் தவமியற்றுந் தாயவளின் 
அன்பிற்கு முண்டோ அணை?

நன்னெறியை நாடுவைநீ! நானிலத்தில் என்னுயிரே 
புன்னெறியைச் சாடுவைநீ பூமலரே – இன்னுலகில் 
அஞ்சுதலை முற்றும் அறுத்திடுவாய் என்னுந்தாய் 
நெஞ்சுக்கு முண்டோ நிகர்?

எதிர்கொள்ளும் பேராசை, ஏக்கழுத்தம் மாய்ந்தே, 
சதிவலை வீசுவோருஞ் சாய - மதியால் 
முனைந்துநாம் சீர்த்தியுற முன்னுழைக்குந் தாயின் 
கனவுக்கு முண்டோ கரை?
 
வீரத்தைப் பாடலாய் வண்டமிழர்ப் பாவியமாய், 
ஆர்க்கின்ற தாலாட்டாய், அன்புமனச் – சீர்மையெனச் 
சேய்தன் இதயத்தில் சேர்க்கின்ற தாய்மையின் 
தூய்மைக்கோர் ஈடேது சொல்!
================================
இராச. தியாகராசன்

பிகு:
நயத்தன்பால் - மேவிட அன்பால், ஏக்கழுத்தம் = இறுமாப்பு/ ஈகோ, 
சீர்த்தி = கீர்த்தி/ பெருமை/புகழ்,  பாவியம் = காவியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக