செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கவிதையெனக் கருவுயிர்க்கும்.....

ஒரிரவு  எது எனதுள்ளே கவிதையெனக் கருவுற்று உயிர்க்கின்றதென வினா பிறந்தது.   எனதுள்ளம் சொன்னதை உங்களுக்கும் சொல்கிறேன்.
=================================================













=================================================
கவிதையெனக் கருவுயிர்க்கும்.....(கொச்சகக் கலிப்பா)
=================================================
வனமடர்ந்த மனவெளியின் வாசங்கள் மாறுகையில்
மனதுள்ளே மானுடத்தின் மயக்கங்கள் மருகிநிதம்
தினவெடுத்த எண்ணங்கள் தீச்சொரியும் காரிருளில்
கனவுகளே கார்காலக் கவிதையென கருவுயிர்க்கும்!

கோடியெனக் கோணல்களைக் கொட்டுகின்ற மனங்களிலே
தேடிநிதம் பித்தரெனச் சீரழிக்கும் பொல்லாத
மூடிகொண்ட முகங்களெனும் மோழைகளின் மோசத்தால்
ஆடிவரும் ஆசையெனும் அவலந்தான் ஆட்சிசெயும்!

வையகமும் மானுடமும் வாழ்நாளி லுய்த்துமனம்
துய்த்துணர வேண்டியதைத் துல்லியமாய்த் தூய்மையெனும்
மெய்யான மெய்யதனை மிளிர்கின்ற நேர்மையெனச்
செய்துவிடும் நல்லவர்கள் சீர்த்தியுடன் வாழியவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக