சனி, 4 ஆகஸ்ட், 2012

சொல்லத்தான் நினைக்கிறேன்.....

நகர நரகம் - சொல்லத்தான் நினைக்கிறேன்...  (நிலைமண்டில அகவற்பா)
===============================================================
சொல்லுங்கள் வலையுலாவும் நண்பர்களே, மனிதம் நேயம் வெளிப்பட சுனாமி அலையாய்  இழப்பா  வேண்டும்? 

இழப்பில்லாமல் மனிதம் வெளிப்படலாகாதா?  நாலு பேருக்கு உதவும் எண்ணம் இயல்பாய் வரவே வராதா நம்மிடம்?..

விடையில்லாத  வினாவினைக் கேட்கிறேனோ!.........
==========================================

=========================================

எதுகை மோனை யாப்பின் வழியில்
விதமாய் உதித்து பற்பல வகையில்
வெல்லச் சொற்கள் வெடிக்க சிதறி
சொல்லத் துடிக்கும் சிந்தனை என்னில்!

தூய்மை நேசம் தாய்மை யன்பு
வாய்மை யழகு வளமை கொஞ்சுங்
கிராமிய வாசம்; கவடுக ளில்லாச்
சீராய் வாழ்வின் தெளிவை விடுத்து

பொய்மை யழகுப் புதுக்கு மூற்றாம்
இயந்திர நகரில் இன்பந் தேடி,
முயன்று பலப்பல முறையி லோடி,
மயக்கும் வலையாம் மதுவை நாடி,

சூழுங் கவலைக் கரையா னரிக்க
வாழ்வைத் தொலைக்க மயக்க நகரம்!
ஊரின் நடுவே உயிரென நின்றே
இறைக்கச் சுரக்கும் ஊரணி யில்லை!

காற்றின் மாசினை யுறிஞ்சிக் காக்கும்
மரங்க ளில்லை; மனிதமு மில்லை!
அண்டை மக்கள் வீட்டில் நிகழும்
சண்டை, சேர்க்கை, சகல நடப்பின்

ஆசா பாசம் அனைத்தும் வலிந்தே
உசாவி யறியுங் கரிசன மில்லை!
உணர்வில் பிரிவை ஒழுக்கக் கேட்டை
முனைந்தே ஊரார் முறையாய்த் தம்முள்

ஒன்றாய் நின்றே அன்பாய்க் கூடி
நன்றாய்ப் தீர்க்கும் மன்ற மில்லை!
குடும்பங் கூடி கூட்டாய் உண்ணும்
கடமை யதுவே காற்றில் பறக்க,

காட்சிப் பெட்டிக் கட்டி யழுதிடும்
நாடகப் பேத்தல்; நசுங்கிய வாழ்வில்
காரது வழங்கும் கொடையே பொய்க்க
நீருக் கலையும் நிலைமை எதனால்?

வண்டிப் புகையை புழுதிப் பெருக்கை
கண்டும் காணாக் கசப்பு வாழ்க்கை;
இகமதி லின்று மனிதன் தேடும்
நகர நரக போதை யிதுவோ?

உண்மை அன்பு உறவின் அண்மை
கனிந்தே துடித்துக் கடுகி யுதவ
மனித நேயம் மலையாய் எழும்ப
சுனாமி அலையாய் இழப்பா வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக