செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கரை சேராப் படகுகள்.....

கவிதைச் சங்கமம் அறிவித்திருந்த கவிதைப் போட்டியில் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பங்குபற்றி, நான் எழுதிய பாடலிது.  கவியருவி என்பது  "தடாகம்"  என்கிற பன்னாட்டு அமைப்பால், எனக்களிப்பட்ட விருது.  இன்னும் வாழ்நாள் சாதனையாளன் விருது, நிலவுப்பாவலன் விருது,  கவிமாமணி விருது, மாகவி விருது, கவிப்பெருஞ்சுடர் விருது, பாவலர்மணி விருது, இப்படிப் பலவற்றைப் பல அன்பான அமைப்புகள் அளித்தும்  இருக்கின்றன.  கவியருவி விருதினை மட்டும் ஏன்  முன்னொட்டாக வைத்திருக்கிறேன் என்பதற்காக கரணியத்தையும், என்னுடைய முகநூல் பக்கத்தில், முதலிலேயே சொல்லியும் இருக்கிறேன், அஃது என்றன் தோழியர் ஒருவர்க்கு  நன்றிக்கடனாய் நானளிக்கும் மரியாதை என்று.  

ஆனால் மீண்டும் மீண்டும், உனக்கு நீயே கவியருவி என்று போட்டுக் கொள்ளும் நீயெல்லாம் ஒரு ஒரு மனிதனா என்றும், நல்ல தமிழார்வலர் என்றுமே தனக்குத் தானே பட்டத்தைப் போட்டுக் கொள்ள மாட்டார் என்றும்; அப்படிப் போட்டுக் கொள்பவர்கள் தமிழை நேசிப்பரே இல்லை; தமிழால் பிழைப்பவர் என்றும், தாய்மொழியை மதிக்காத,   இந்தி/ சங்கதத்தைப் பெரிதாய் எண்ணுந் தமிழர் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் காண்கையிலே  வருத்தமாய்த் தானிருக்கிறது.  கீழிருக்கும் பாடலில் ஞமலியைச் (நாய்)  சொல்வதால் அந்த நன்றியுள்ள உயிர, மனிதர்களை விடக் குறைவானதன்று.

இன்றைக்கு என்ன தாளிதம்?  ஊன்சோறா (அ) காய்ச்சோறா என்று நிலைச்சேதி போட்டு, 100/200 பின்னூட்டமும் 200/300 விருப்புகளும் தேடுவதென் விருப்பமும் இல்லை.  நேற்று யாரோ; இன்று இவர்; நாளை நான்; அடுத்து நீ;  இதுதான் வாழ்வியலின் தத்துவம்.   எழுதுவது என்கடன் அவ்வளவே!  விருப்பமிருப்பவர் படிக்கட்டும்!  வேண்டாதவர் என்னைப் பட்டியலிலிருந்து விலக்கிவிட்டு அவரவர் பணியைப் பார்க்கப் போகட்டும்;  யார் வேண்டாமென்கிறார்? அவரவர் வழி அவரவர்க்கு. 
==========================================












============================================ 
கரைசேராப் படகுகள்  (கொச்சகக் கலிப்பா)
============================================
வரையில்லா வசதிக்காய் வக்கில்லா வழிகளையே,
நுரையொத்த வாழ்விற்காய் நோக்கில்லாப் பழிகளையே,
அரைவயிற்றுச் சோற்றுக்காய் அன்றாடம் ஏற்கின்ற
புரையொடிப் புண்மேவும் புல்லரென வாழ்வதுமேன்?

அவரவர்கள் தாம்பெற்ற அன்னையரை மதித்திங்கே,
கவனமுடன் கண்போல காக்கின்ற வேளையிலே,
தவறென்ற எண்ணமின்றித் தாய்மொழியைக் கிழிந்துவிட்டச்
சுவரொட்டிப் போலெண்ணித் துச்சமென மிதிப்பதுமேன்?

பாலுடனே பழஞ்சேர்த்தே பாசமது பரிந்தோங்கத்
தாலத்தில் சோறிட்டுத் தந்தவன்புத் தாயவளைத்
தோலுடனே சதையெல்லாஞ் சுருங்கிவிட்டக் காரணத்தால்,
சீலமறக் கந்தையெனத் தெருவினிலே வீசுவதேன்?

கமழ்கின்ற பாமணக்கும் கன்னலதால் தாலாட்டும்
தமிழ்த்தாய்க்குத் தான்பிறந்த தன்மானத் தமிழோனே!
அமிழ்தொத்த அருந்தமிழை அரைக்கின்ற எந்திரமாய்,
உமிழ்துமிழ்துத் துப்புகின்ற உணர்விங்கே யார்கொடுத்தார்?

கரைசேராக் கட்டையெனக் காலமெலாம் கருத்தின்றித்
திரைமேலே தினந்தோறும் திண்டாடுந் தீந்தமிழா!
இரைக்காகச் செய்ந்நன்றி இவ்வுலகி லேத்துமந்த,
குரைக்கின்ற நாய்கூட குவலயத்தில் மேலன்றோ?
============================================
இராச தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக