வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கையில் விழுந்த கனி.....

இணையத்தில் மரபியலைப் போற்றும் சந்தவசந்தம் குழுவில், ”கையில் விழுந்த கனி” என்ற ஈற்றடிக்காக என்னுடைய மைந்தன் வைகறைச்செல்வனைப் பற்றி நானெழுதிய வரிகள்!
====================================================

====================================================
நேரிசை வெண்பாக்கள்

கொய்யாக் கனியைக் கவிபாட வேண்டுமென்று
செய்தார் வசந்தமவை சீலத்தோர்! – நெய்தேன்பா;
வைகறைச் செல்வன்தான் வாழ்வி லெமக்கின்று
கையில் விழுந்த கனி.

ஆயிர மாண்டுகள் ஓர்ந்துளங் கூர்ந்திலங்க
தூயநற் றொண்டுகள் செய்தபலன்! – சீயமென
பைந்தமிழ் பாரதியின் பாச்சுளையாய், செல்வனெம்
கையில் விழுந்த கனி.

வீங்கிளந் தென்றலென மேவி, யினித்திடும்
மாங்குயிற் பாட்டின் மழலைக்கா – யேங்கிமனம்
நைந்தவெமக் கின்று நறுந்தமிழாய்ப் பொற்கிழியாய்க்
கையில் விழுந்த கனி.

தெவிட்டாத தீம்பாலாய்த் தெள்ளமுதாய்த் தேனாய்க்
கவினுறுகற் கண்டுக் கவியாய்ப் – புவியுதித்த
வைகறைச் செல்வன்; மலர்ந்த மலரெங்கள்
கையில் விழுந்த கனி.

கடற்கரைக்குப் போனாலும் காந்தியை* விட்டே
அடமாய் இறங்கா தழுவான்! – படத்தில்
திருவள் ளுவர்கண்டால் தோ!திரு வென்பான்!
அருணென் றழைப்போம் அழகு!

பாவேந்தை, பாரதியைப் பார்த்தாலே கைகூப்பி
நாவால் வணக்கம் நவின்றிடுவான்! – தாவிமடி
தேடியவன் கேட்பதுவும் சிந்துநதிப் பாட்டினைத்தான்!
ஆடகமாய் வந்தான் அழகு!
=====================================================
*புதுவை  கடற்கரையில் இருக்கும் காந்தி சிலை.

2 கருத்துகள்:

  1. ''..கேட்பதுவும் சிந்துநதிப் பாட்டினைத்தான்!
    ஆடகமாய் வந்தான் அழகு!..''
    தந்தையைப் போல் பிள்ளை. இறையாசி நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி பாவலரே உங்கள் இனிய கருத்துரைக்கு.

    பதிலளிநீக்கு