புதன், 8 ஆகஸ்ட், 2012

மாண்புடனே வாழியவே!.....


சில நேரங்களில்  உள்ளே உணர்வூறிய ஆற்றொணாத வேதனையை, கையால் ஆகாமல் கைகளைப் பிசையும் கேவலத்தை,  எண்ணி உளம் மாயும் துன்பத்தை என்னென்று சொல்வது?   கடமைகளால் கட்டுண்ட, இயலாமையின் உச்சத்தில் இருக்கும், எம்போன்றோர், என்னதான் செய்ய இயலும்?
==============================================









|

==============================================
மாண்புடனே வாழியவே  
(தரவு கொச்சகக் கலிப்பா)
========================

தீக்கனலே! செம்மொழியே! செந்தமிழே! என்றெல்லாம்
பாக்களினால் தமிழ்பேசி பாசாங்கு செய்தபடி
சாக்காட்டுச் சாதிமத சழக்கென்னும் கோண(ல்)அரை
வேக்காட்டு அரசியலின் வேர்கொண்ட தமிழினமே!

நந்தமிழை நாக்கூச நரகலெனும் வேதனையை,
செந்தமிழைச் செந்தணலிற் றீய்க்கின்ற தீமையினை,
சிந்தனையைத் தான்பொசுக்கிச் சீரழிக்கும் போதையினை,
எந்நாளும் எத்தர்களே ஏத்துகின்ற ஈனமதாம்

தன்னலப்பேய் வெருண்டோடத் தாரணியை வாழ்விக்கும்
அன்பென்னும் அற்புதமாம் ஆழ்கடலில் முக்குளித்து
நன்னலமாம் முத்துகளை நம்மிளையோர் பெற்றிலங்கி
மன்னவராய் ஓங்கலென மாண்புடனே வாழியவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக