புதன், 8 ஆகஸ்ட், 2012

கள்ளக் கருநிலவு........


ஒரு இணைய நண்பரின் நிலவு பற்றிய நான்கு வரிப்புதுப்பாவின் தாக்கத்தால் நான் எழுதிய வெண்பாயிது. பல ஆண்டுகள் ஆனதால், அந்நண்பரை அறியேன் இப்போது.   இதே பாடலை சுவைத்த கவிஞர் கி.பெ. சீனுவாசன், தம்முடைய ”புதுவைப் பாமரன்” என்னும் சிற்றிதழில் வெளியிட்டார்.
===================================================

===================================================
கள்ளக் கருநிலவு (கலிவெண்பா)
======================================
கள்ளிருக்கும் பூச்செண்டாய்க் கன்னியவள் காத்திருக்க
முள்ளாம் முழுநிலவின் மோகக் கதிருயர்வோ?
துள்ளு மிளமானாய்ச் சுந்தரியே இங்கிருக்கக்
கள்ளக் கருநிலவின் கானல் கதிருயர்வோ?

தங்கக் கொலுசணிந்த தத்தைமொழி முத்திருக்க, 
அங்கந்தேய் அம்புலியின் ஆர்க்குங் கதிருயர்வோ?
நங்கை விரிக்கின்ற மாயக்கண் வீச்சிருக்க, 
மங்கிவளர் வாநிலவின் வஞ்சக் கதிருயர்வோ?

அள்ளு மழகிருக்க அன்றாடந் தேய்கின்றக்
கொள்ளிக் குளிர்நிலவின் கொட்டுங் கதிருயர்வோ?
முள்ளிச் சிரிப்பிருக்க மோன முகங்காட்டும்
வெள்ளி வெறுநிலவின் வேனற் கதிருயர்வோ?

விண்மதியா யென்மடியில் மெல்லியலாள் வீற்றிருக்கத் 
தண்டமிழில் என்னுளத்தே சந்தப்பாப் பொங்கியெழ, 
வெண்பனியாய்ச் சிந்தி விரலிடுக்கி லோடிவிடும் 
வண்ணச் சிறுநிலவின் மந்தக் கதிருயர்வோ?

மண்ணுலகில் என்னை வலைவீசிக் கட்டிவிடுங் 
கண்ணழகி காவதனில் காதலுடன் காத்திருக்க,
வெண்ணெய்யாய்த் தீயில் விரைந்தே உருகுமந்த 
விண்ணிலவின் தேய்கின்ற விந்தைக் கதிருயர்வோ?

கன்னலாய்த் தித்திக்குங் காவியம்போற் றுள்ளியே 
மன்னுதமிழ் பாவிசைக்கும் மங்கை அணைப்பிருக்கச் 
சென்னி மழுங்கடிக்குஞ் சின்னக் கதிருயர்வோ?
அன்புடனே சொல்வீர் அறிந்து.
===========================
இராச. தியாகராசன்

பிகு:
தத்தைமொழி - கிளிமொழி (இங்கு மங்கை பேச்சுக்கானது)
அம்புலி - நிலவு
முள்ளி - தாழை/ மருதோன்றி/கள்ளு (Frangrantscrew/Baleria/Toddy)
(நான் கள்ளு/ தேறல் என்ற பொருளில் எழுதினேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக