வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கவிதைப் பட்டிமண்டபம்....


சந்தவசந்தம், கூகுள் குழுவில், சமீபத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டிமண்டபத்தில் தமிழுக்கு இன்று வளர்ச்சியே என்ற தலைப்பில் வாய்ப்பளிக்கப்பட்டு, ஒரு பாடல் தந்தேன்.  உளமென்னவோ தளர்ச்சியின் பக்கத்தில் இருந்தாலும், வாய்ப்பு வந்தது வளர்ச்சி அணியில் வாதிட!  தீர்ப்பு, எங்கள் அணிக்கே, கூடவே ஒரு சொல்லாட்சியுடன், வெற்றிக்கனியை வென்றெடுத்தது வளர்ச்சி அணி வாதத் திறமையினால்.

பட்டிமண்டபத் தலைமை: பேரா. பசுபதி அவர்கள்.
==================================
பட்டிமண்டப நோக்கர்கள்: கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள், கவியோகி வேதம் அவர்கள்

வளர்ச்சி அணித் தலைவர்: பாவலர் நாராயணன் சுவாமிநாதன்
பாவலர்கள்: நான்,  பாவலர் சுகந்தி வெங்கடேஷ்

தளர்ச்சி அணித் தலைவர்: பாவலர் சந்தர் சுப்ரமணியன்
பாவலர்கள்: பாவலர் கார்த்திக், பாவலர் அகிலா இராமசாமி
=============================================

=============================================
என்னுடைய வாதம்:
=====================
கவிதைப் பட்டிமண்டபம்:4
===========================
தமிழ் வணக்கம் (எண்சீர் விருத்தம்)
===================================
மலர்க்காவாய், மனம்நாடும் மழலைத் தேனாய்,
…..வஞ்சியர்கள் நாடுகின்ற வண்ணப் பூவாய்,
புலர்காலைக் காட்சியெனும் பனிப்பூ போர்த்த,
…..பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையாய்,
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் தென்றல் காற்றாய்,
…..தித்திக்கும் தேன்பாகாய் நாவில் ஊறி,
வலிமையுடன் வந்தெதிர்க்கும் பகைவர் தம்மை
…..வகுந்தெடுக்கும் வண்டமிழே வாழ்க நீயே!

அவை வணக்கம் (கட்டளைக் கலித்துறை)
==================================
எண்ணும் உணர்வினில் ஏற்றம் பெருகிட இப்புவியில்,
நண்ணும் நிறைவுடன் ஏந்திப் பரிவுடன் நற்றமிழைப்
பண்ணில் அழகுற மேன்மை வளர்ச்சியைப் பாடவைக்கும்
வண்ணத் தமிழெனும் சந்த வசந்தமே வாழியவே!

தமிழின் உயர்வே! (கட்டளைக் கலித்துறை)
===================================
வள்ளைக் கவியென பூவின் மணமதன் மாட்சிமையாய்
துள்ளி எழுந்திடும் காலைக் கதிரதன் சூச்சுமமாய்
தெள்ளத் தெளிவுற உங்கள் உளந்தனில் தேடிடுவீர்
கிள்ளிக் கரந்தனை கொஞ்சம் விழிப்புடன் கேட்டிடுவீர்!

விண்ணில் எழுந்தவில் ஏழு நிறங்களாய் மாந்தரவர்
கண்ணில் தெரிவதும் கானல் அதுநிசம் இல்லையன்றோ?
வெண்மை யெனுமொரு உண்மை நிறமது மெய்மையன்றோ?
எண்ணி யிதையுளம் பொங்கத் தமிழினை ஏத்திடுவீர்!

ஒண்ட மிழதுவே மக்கள் நடுவினில் ஓரழகாய்,
வெண்மை நிறமது தன்னில் உறைபல வண்ணமதாய்த்,
தன்னைப் பலமுறை மாற்றும் நிலையதால் தாரணியில்
மென்மை நிறமென பூஞ்சைத் தமிழென விள்ளுவதோ?

மாற்ற மிலாதவை என்றும் மடிவதே மாண்பதனால்
மாற்ற மெனுமுயர் பண்ப துவேநிலை யானதன்றோ?
வேற்று மொழிகளின் தாக்கம் பலமுறை மேவியதால்
ஏற்றத் தமிழ்மொழி தாழ்ந்து கடைநிலைப் ஏகிடுமோ?

சந்த ரெனுங்கவி சிந்தை மயங்கிடச் சந்தமுடன்
செந்த மிழேநிலை தாழ்ந்த தெனபல வந்தமுடன்
சந்த மவைதனில் முந்தி வரிகளில் சாற்றியதும்
சிந்தை கவர்ந்திடும் விந்தை மரபெழிற் செந்தமிழால்!

வாழும் பலமொழி காணு மிலக்கியம் மாந்தியதால்,
சூழும் பகைவரும் நாணிக் கலங்கிடத் தொல்தமிழும்,
ஆழி யலையென வேழ நடையினில் இன்றுவரை;
ஊழி யதையெதிர் ஓங்க லெனநிதம் ஓங்கியதே!

ஊட கமொழியின் மேன்மை வளர்ச்சியை ஊசலென்று
பாட வரும்கவி மக்கள் உமதெதிர் பார்த்திடுவீர்;
நாடு கடந்துமே ஆழி கடந்துமே நம்மவையில்
கூடு தமிழ்மொழி பட்டி யரங்கமே கோலவெழில்!

எங்கே நெடுங்கதை இற்றை நிலையினில் என்பவர்க்கே;
மங்கா தொளிர்திடும் பாஞ்சா லிசபத மாகவிப்பா;
வங்கக் கடலிரை பாவேந் தரின்பெரும் வான்கவிப்பா;
சங்கத் தமிழொளி புத்தன் பிறப்பெனும் தேன்கவிப்பா!

இணைய வளர்ச்சியை நம்மின் மொழிக்கென ஏற்றிடவோ;
கணினித் துறையதன் மேன்மை தமிழ்மொழி கண்டிடுமோ;
அணியின் தலைவரே சந்தர்; குருதிசம் ஆங்கிலம்பின்
பணிவாய் உரைக்கிறேன் ஆர்க்கும் தமிழ்மொழி பங்களிப்பை!

கயலும், புலியுடன், வில்லும் வளர்த்த கனித்தமிழில்
நயமாய் புதுப்பா துளிப்பா இயைப்பா நகைதுளிப்பா
புயலாய் எதுகைப் பிணைத்தமிழ் செஸ்டினா போல்புதுமை
அயலும் இணைந்த அருந்தமிழ் இன்றைய அற்புதமே!

உடையை நமதுபண் பாட்டின் உருவம் உணர்ந்திடுவோம்;
கடையை விரித்து உடையை மொழிக்கே உடுத்துவதை;
தடமாய் நயம்பட நாவில் இனிப்பைத் தடவிடுமோர்
சடங்காய் உரைத்திடும் பொய்யும் நமக்கினி சாத்தியமோ?

பதின்ம எழுநூறு ஆண்டுகள் முன்னர் கவிமொழிதான்;
உதிக்கும் கதிரென வளர்வதால் பின்னர் உரைவழிதான்;
மதியறு ஆள்செயும் தாய்மொழி கேட்டை அறுத்திடநாம்
எதுவுமே செய்வ தியலாது வீழ்ச்சியென் றோதுவதோ?

கண்ணியம் போனகைம் பெண்ணாய் உரைத்த வரிகளைநான்
எண்ணினேன் உள்ளமே நொந்தது; அந்தோ எதற்கிதுவோ?
தண்மையாய்ச் சொல்கிறேன்; எந்தமிழ் என்றும் தமிழ்க்குமரி;
எண்ணிலா ஊறுகள் எத்தனை ஏற்றாள்; எழிற்கிழவி;

வேற்றுவர் தூற்றலும்  கூற்றுவர் சூழ்ச்சியும் வென்றிடுமோ?
போற்றுவர் போற்றலும் ஆற்றலும் ஆர்த்தலும் பொய்த்திடுமோ?
நாற்புறம் நாமினி நாளுமே சேர்ந்ததே நானிலமாம்
வேற்றுமை பார்ப்பதும் வேதனை சேர்ப்பதும் வேண்டுவதோ?

பாரதி சொன்னதை மாந்தரும் கொண்டினி பாரினிலே
தூரமும் தாண்டிநீ வேண்டிய வற்றையே மாமரமாய்
வேரதை மண்ணிலே ஆழமாய் ஊன்றியே வென்றிடுவாய்;
சேரரும் சோழரும் மீனரும் போலவே சென்றிடுவாய்!

விசித்தே அழுத தளர்வின் அணியே உணர்ந்திடுக;
புசிப்பதே பாடாய் இருப்பவர் வாழ்வினில் பூந்தமிழ்பா;
வசந்த மலர்மணம்; பாடலின் இன்பது வந்திடுமோ?
கசிந்தே உருக்கும் இலக்கியத் தென்றல் கருவுறுமோ?

பாமரன் கல்வியே இல்லாத தூமரன் பாரினிலே,
தேமதுத் தூய்மைத் தமிழையே பேசுவான் சீக்கிரமே;
ஆமவர்க் கல்வியைப் பெற்றிட நீங்களும் அன்புடனே;
வாமனர் ஓங்கிய பேருரு கொண்டு வருகையிலே!

செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்!

தக்கபடி  சஞ்சிகை – ”நாளிதழ்” என்பார் தண்டமிழில்;
அக்ரா சனரோ ”அவைமுன் னவராய்” அருந்தமிழில்;
சொக்கும் ”மனசே” ”மனதாய்”  மலர்ந்திடும் தொல்தமிழில்
முக்கிய மந்திரி இன்றோ ”முதல்வராய்” முத்தமிழில்!

ஏழைகள் பேசா மொழியதை மன்பதை ஏற்றிடுமோ?
பேழையில் பூட்டியே வைத்திடும் செல்வம் பெருகிடுமோ?
தாழ்வும் உயர்வுமே கூரதைத் தீட்டுதல் தான்பொறுத்து;
வாழ்வினில் பாமரன் பேசும் மொழியது வாழ்ந்திடுமே!

முற்படும் தீமையாம் மூடர் செயல்களை மூடிவிட்டு,
கற்றிடும் நம்மொழி பல்வகை மெய்யெனும் காட்சிகளை
முற்றிலும் தன்னுடன்  ஏற்றிடும் வாழ்வியல் முத்தமிழே;
வெற்றிகள் மட்டுமே வேட்கையாய் ஏந்திநீ வெல்லுவையே!
===========================================
இணையத்தில் குருதீஷ் ஆங்கிலம் அடுத்து பெருமளவில் பயன்படுவது  நந்தமிழே!
ஆப்பிள் = அரத்தி (குருதி போல் சிவந்திருப்பதால்;  The word Apple is derived from the colour of the mouth part of Ape.)
பிஸ்கட்டு = மாச்சில்லு (மாவினால் செய்த சில்லு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக