செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அறுசுவை விருந்து.......

என்னுடைய முகநூல் சகோதரி திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் தமது சகோதரிகளுடன் மன்றம் போல் அமர்ந்து உணவு தயாரித்தல் பற்றி கலந்துரையாடும் நிழற்படங்களைக் கண்டவுடன் தோன்றிய உணர்வுகளை ஒரு பாடலாக்க முயன்றேன். ஓரளவு வெற்றிதான். ஆனால் அப்பாடல், முழுவதுமாக உருக் கொண்டு மிளிர்ந்தது, சந்தவசந்தம் 9ஆம் ஆண்டு நிறைவு விழாவில், தமிழன்பர்க்கு நான் கவிதை விருந்தளித்த போதுதான். முகநூலின் நண்பர்களுக்கு நான் பகிர்ந்ததை, திரு நீடுர் அலி அவர்கள் தம்முடைய வலைப்பதிவிலும், இண்ட்லி தளத்திலும் வெளியிட்டு, என் மீதான அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கு என் நன்றிகள்.
=====================================================














=====================================================
அறுசுவை விருந்து  (கொச்சகக் கலிப்பா)
====================================

வேகவைத்த வாழைக்காய், மின்னுகின்ற பொன்னுசிலி,
பாகற்காய்ப் பொரியலொடு, பருப்புடனே பச்சடியும்
சேகரித்த சேம்பதுவின் செழுவரட்டி, அப்பளமும்
வாகெனவே நானுமக்கு வாழையிலை விரித்திங்கே

நறுமுகையாய் சாதத்தில் நன்னெய்யைத் தான்விட்டுச்
சிறிதளவே சீரகத்தைச் சீராகப் பொடித்திட்டுக்
குறுமிளகோ டுப்புடனேக் கொஞ்சமாய்க் கிளறியிங்கு
வறுத்தமணத் தக்காளி வற்றலுடந் தருகின்றேன்!

செறிவான செங்கனிகள் தேடிச்சீர்த் துண்டமிட்டுக்
கறந்தபசுந் தயிர்கலந்து கணக்காக உப்புமிட்டு
நறுமணந்தான் வீசிடவே நாவூறத் தாளித்தே
வறுத்தமோர் மிளகாயின் வற்றலுடந் தருகின்றேன்!

விருந்தின்பின் குடந்தையின் வெற்றிலைக்குச் சோடியென
விருதையின் சுண்ணாம்பும், மாயவரம் நெய்சீவல்
விருவிருக்க நாந்தருவேன் வெள்ளியாம் தாலத்தில்;
விருந்துண்ண வாருங்கள் விந்தைமிகு பாவலரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக