வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வாழ்வியற் பாடங்கள்.....


கீழிருக்கும் பாடல்கள் நான் என்னுடைய இளமையில் எழுதி, சந்தவசந்தத்தில் பாடங்கள் என்ற தலைப்பில் பாவரங்கில் மறுபதிவு செய்தேன்.   குறிப்பாக பல இடங்களில் மோனைத் தொடை விளங்காமல் போனாலும், மற்றைய இலக்கணங்கள் பொருத்தவரை வழுவாது அமைந்துள்ளன.
=====================================

=====================================
காதற் பாடம்: (நேரிசை வெண்பா)
==========================
வாழையெழிற் றண்டாய் வழவழக்கும் காலுரச
தாழைமணம் வீசும் கருங்கூந்தல் – வீழ்ந்திழைய
காந்தள் மலர்க்கை வளைத்தே இதழ்பொருத்தி
தேந்துளி முத்தமீந் தாள்.

காதற் பாடம்: (இன்னிசை வெண்பா)
============================
சோலைக் குளமேவுந் தாமரையாய்ப் பெண்ணிருக்க
சாலப் பரிகின்ற செங்கதிராய் நானிருந்தேன்;
காலக் கரையான் கரைத்தழிக்கக் காதலெனும்
கோலம் அழிந்ததுவே காண்.

உறவுப் பாடம்: (வெண்டளையான் வந்த அறுசீர் விருத்தம்)
=============================================
தோய்ந்த பரிவால் கவினுறு
…..தோற்றங்கள் தாயவளேக் காட்டியதும்;
ஆய்ந்தே உலகின் அறிவதனை
…..அன்போடு தந்தையவர் ஊட்டியதும்;
பேயாய்ப் பிடித்தென்னைப் பாடெனப்
…..பீடித்த ஆசைகள் சாற்றியதும்;
தீயாம் அவற்றின் துயரமறத்
…..தெய்வம்போல் அண்ணன்கள் தேற்றியதும்;

சுற்றமெனும் உண்மை உறவுகள்
…..தோற்றிய பாடமென நானுலகில்,
கற்றது; நானுலக மேடையிலே
…..கற்றதனால் நெஞ்சினில் வேதனைகள்,
உற்றது; வீணான வேதனைகள்
…..உற்றதனால் வாழ்வினில் பட்டறிவே,
பற்றியது; பட்டறிவும் பற்றியதால்
…..பாரில் அடைந்தேன் உயர்வே!

வளர்ச்சிப் பாடம்: (கலிவெண்பா)
==========================
அறியாப் பருவ அகண்டவெளிப் பாடம்;
உறக்கத்தில் நேர்ந்த உருவெளியின் தேடல்;
சிறுவயதுச் சின்னம்; சிதைந்த சிதறல்;
வெறுமைக் கனவுகளின் வேடிக்கை உலகம்!

அறிவியலின் பாடத்தை ஆர்வமாய் விரும்ப,
செறிவான செல்வம் தகையாத சூழல்,
கறந்திட் டதனால் கனவும் கலைந்து,
பொறுப்பாய்ப்  பொருளியல் கற்கவே நேர்ந்தேன்!

வருத்தம் இருந்தாலும் வாழ்க்கை நடப்பில்,
சருகாம் வழியினிலே தாய்தந்தை தந்த
இருப்பாம் இதனையே இன்முகமாய்ப் போற்றி
இருக்கும் இயல்பே எழில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக