செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

செம்மலரின் கொற்றவரே!......

இந்திய நாட்டின் முதல் முதன்மை அமைச்சர், மனிதருள் மாணிக்கம், திரு சவகர்லால் நேருவும், அவருடைய குடும்பமும், நாட்டுக்காக செய்திட்ட ஈகம் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை எவராலும் மறுக்க ஏலாது.  எனக்கும் அவர்தம் கொள்கை/ திட்டங்களில் சில/பல விமரிசனங்கள் உண்டு.  நானெவரையும் கண்களை மூடிக்கொண்டு தொடர்பவன் இல்லை.  அரசியல் பேசுவதிலும் எனக்கு அவ்வளவாக அக்கறையுமில்லை.  ஆனால், நாட்டை விற்றவர்; சபல புத்திக்காரர்;  என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, அவரின் சீர்த்தியை எவரும் குறைக்கவும் முடியாது. 

அரசியலில் மாற்று கருத்திருப்பது சாதாரணம். இம்மனிதருக்கென்று என்னில் என்றுமே ஓரிடம் உண்டு. முதலில் இந்த பாடல் வெளியான தளம் நிலாச்சாரல் என்னும் கவிதைகள் தளம். பின்னர் நீடூர்அலி அவர்களும், முகநூலில் நான் நண்பர்களுக்குப் பகிர்ந்ததை தமது வலைப்பதில் பதிந்தும், பின்னர் இண்ட்லியில் பதிந்தும், என்மீதான அன்பினை வெளிப்படுத்தினார்.  எனக்கு நேரு என்னும் மாமனிதர் என்றுமே நேர்தான். அவர்தம் பிறந்தநாளான மழலைகள் நாளில் (நவம்பர் 14ஆம் நாள்), நினைவுகூர்ந்து அனைவர்க்கும் வாழ்த்துரைக்கிறேன்.  கம்புசுற்றும் வலதுசாரிகளும், இடதுசாரிகளும், அடிப்படைவாதிகளும், அவரவர் பக்கங்களில் சுற்றிக் கொள்ளுங்கள். 

==================================================












==================================================
செம்மலரின் கொற்றவரே! (கலிவெண்பா)
======================================
கொஞ்சுமெழிற் செம்மலரின் கோதிற்சீர் கொற்றவராம் 
பிஞ்சுமொழி பேசுகின்ற பிள்ளைகளுக் குற்றவராம்! 
அஞ்சுதலே இல்லையெனும் ஆன்மபலம் பெற்றாலும், 
வெஞ்சினமாய்ப் பேசாத மெல்லியலுங் கற்றவராம்! 

வேளாண்மை செய்பவர்கள் மேலாண்மை உற்றிடவும், 
நூலகங்கள் நம்நாட்டோர் நூற்றளவிற் பெற்றிடவும், 
ஆளுகின்ற போதிலவர் ஐந்தாண்டுத் திட்டமெலாம்,
சீலமுடன் தீட்டிவைத்த சீர்த்தியையும் நாடறியும்! 

வேட்டையிட்டே அண்டையரை வென்றிடவே எண்ணாமல், 
கூட்டுறவே நாட்டுயர்வுக் கொள்கையெனச் சொன்னாரே! 
மாட்சிமையாய் வாழ்வதற்கே வையகத்தின் மைந்தர்க்கே 
ஆட்சிமுறைத் தத்துவத்தை ஐந்தெனவே தந்தாரே! 

நாலைந்து பிள்ளைகளை நாமுமிங்கு பெற்றிடவோ; 
வாலறிவுக் கல்வியெனும் நல்லொளியை விட்டிடவோ;
சீலமெனுமிச் சீர்த்திதருஞ் சிந்தனையைக் கொண்டால்தான், 
ஞாலமதில் இந்தியரும் நன்னலமாய் வாழ்வமென்றார்! 

வாழ்நாளின் காப்பீட்டை வாழ்க்கையிலே ஏற்பதனால்,
கீழ்நிலையில் நாமடையுங் கேடகன்று போவதுடன்,
வீழ்கின்ற வேளைவரும் வேதனையுஞ் சோதனையுஞ் 
சூழ்துயரம் ஏதுமின்றிச் சுற்றமதும் ஓங்குமென்றார்!

மாந்தருள்ளே நன்மணியாம் மண்ணுதித்த நம்சவகர்;
காந்தியவர் ஏத்தியதைக் கண்ணெதிரில் கண்டோமே! 
ஈந்தளித்த இந்தியமண் எந்நாளும் பேர்துலங்க, 
வேந்தெனவே வாழ்ந்தார்நம் நேரு.
======================================
இராச தியாகராசன்.

பிகு:
செம்மலர் = ரோசா மலர்
வாலறிவு = தூய அறிவு
வாணாள் காப்பீடு = லைஃப் இன்சூரன்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக