செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

எம்மதமும் சம்மதமே!.....

புதுவையின் நாடகக் காவலர் கலைமாமணி திரு இராசா அவர்களின் மன்றத்தில் நான் வாசித்தளித்த பாடல்.   நாடகத்தமிழுக்கு அவர்தம் தொண்டு மிகச் சீரியது. அத்துடன் திங்கள்தோறும் அவர் தமிழார்வலர்களைத் தேர்ந்து, சிறப்பு செய்யும் நேர்த்தியும் மிக அருமை.
===============================================













========================================
எம்மதமும் சம்மதமே! (கொச்சகக் கலிப்பா)
========================================

முத்தனைய சத்தான முழுமுதலாம் இறைவனையே,
நித்தமும்நாம் நெஞ்சினிலே நெகிழ்ந்துருகி நினைத்திடவே,
தத்துவமாய்த் தாரணியில் தலைமேலே தாங்கிடவே,
எத்தனையே சமயங்கள் எடுத்துரைக்கும் நல்வழிகள்.

நீயுயர்வா நானுயர்வா நியமந்தா னுயர்வாவென்(று)
ஐயமறத் தெளிந்துணர அறியாமை யகன்றுணர
ஆயுதத்தா லாகாதென்(று) அறியாம லலைகின்ற
வையகமே, வண்டமிழர் வாழ்வியலை ஆய்ந்துணர்ந்தால்!

செம்மையுற மாந்தரினம் சீர்த்திகளைப் பெற்றிடவே,
எம்மதமாய் இருந்தாலும் எவ்வினமாய் பிறந்தாலும்
தம்மவராய் நினைந்துருகும் தமிழர்த மன்பினையே
சம்மதமாய் தருகின்ற தன்மையினை வாழ்ந்துணர்ந்தால்

இயற்கையினை இன்பமிகு இல்லறத்தை நல்லறமாம்
பயிர்தொழிலை பழகுதமிழ்ப் பாட்டியலை களவியலின்
நயங்களையும் கற்பியலின் நலங்களையும் நாட்டாரின்
உயர்பண்பை எடுத்துரைக்கும் ஒண்டமிழிற் றோய்ந்துணர்ந்தால்

தனிமதமென்(று) ஒன்றில்லாத் தமிழ்ச்சமயத் தத்துவத்தை
மனிதமன நேயமெனும் மகத்தான அற்புதத்தை
இனியிங்கே இயல்பழகாய் ஏற்றுணர்ந்தால் மண்ணுலகம்
கனிவளங்கள் செறிந்தப்பூங் காவெனவே மாறுமன்றோ!
======================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக