செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நெடுவழி நாடும் பறவை....

இசையார்வலர் திருமதி சௌம்யா ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்த ஒரு நிழற்படத்தைக் கண்டதும் என்னில் ஏற்பட்ட உணர்வுகள் ஒரு கவிதையென வெளிப்பட்டது.
=================================================













=================================================

நெடுவழி நாடும் பறவை (கொச்சகக் கலிப்பா)
=========================================

கறையில்லாக் கதிரவனும் கதிரடக்கி மேற்றிசையில்
மறைகின்ற மாலையெனும் வான்வெளியில் ஒருபறவை,
இறையவனும் உறைகின்ற இல்லமதைத் தான்வணங்கி
நிறைவெய்த வேண்டுமென்று நெடுவழியைத் தேடிடுதோ?

சிறகடிக்கும் மனப்பறவை சிந்தனைவான் வெளிதனிலே
சிறைபடுத்தும் சங்கிலிகள் தெறித்துவிழ வேண்டுமென்று
கறையில்லாக் கடவுளுறை கோபுரத்தின் சாட்சியுடன்
இறைவனிடம் சேர்ந்திடவே எழுந்திங்கு தேடிடுதோ?

கருத்திருக்கும் ககனத்தில் கருக்கலெனும் வேளையிலே
அருந்தவமாய் ஆண்டவனை அடைந்திடத்தான் அகமுருகி
விருப்புடனே விசும்புயர்ந்த வேந்தில்லத் திசையினிலே
பருந்தொன்று பாய்ந்தழகாய்ப் பறந்தங்கு பார்க்கிறதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக