செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஆட்கொல்லியில்லா அகிலம்

ஆட்கொல்லி நோயெதிர்ப்பினை ஒட்டி நான் எழுதிய இந்த நேரிசை வெண்பாக்களைத் தனித் தனியாக முகநூலில் பகிர்ந்தாலும், சிற்சில மாற்றங்களுடன், ஒன்று திரட்டி இதை ஓரிடத்தில் முன் வைக்கிறேன்.
=============================================












=============================================

ஆட்கொல்லியில்லா அகிலம்
(நேரிசை வெண்பாக்கள்)
==============================
தங்கத்தில் சீரணியும் தாய்வீட்டுச் சீதனமும், 
துங்கமணி போன்ற சுடர்பட்டும் – நங்கைக்கே 
அற்புதமாய்ச் சேர்ப்பதன்றி அன்பர்களே, தேவையிங்கு 
மற்றவரை நோக்கா மனம்!

சோதிநிகர்ப் பெண்ணே துணையா யிருந்தாலும் 
வேதனையில் வீழ்கின்ற வீணர்காள்! - ஈதுமக்கு
மட்டுந் துயராமோ? வாழ்வறமாம் நேர்வழியைத்
தட்டாத வாழ்வே தரம். 

தேனமுத வாழ்வியலில் சேர்ந்திட்ட நல்லிணையர்
வானுயர ஓருயிராய் வாழ்கையிலே - ஊனுடம்பில் 
வாழுயிரைக் கூசாமல் மாய்க்கின்ற ஆட்கொல்லிப் 
பாழுக்கிட முண்டோ பகர்!

ஆற்றொணா தாளழிக்கு மாட்கொல்லி நோயினையே 
வீற்றிருக்க வாவென்னும் மேதைகளே! – சாற்றுகிறேன், 
போதையில்நீர் மாய்வதன்றிப் பூப்போன்ற நுந்துணையும்
வாதையிலே வீழ்ந்தழி வார்.

உயிர்காக்கும் மாமருந்தின் ஊசியினை மீண்டும்
பயனாக்கி ஆளழிக்கும் பாழ்நோய்த் – துயரத்தில்
போகாமல் ஓரூசி போதுமெனச் சொல்வதுவே
வாகான வாழ்வின் வழி!

சயனமின்றிச் செல்வத்தைத் தான்தேடும் பேர்கள், 
வயணச்ச ரக்குந்தால் வாழ்வோர்! - மயங்கி,
முறைதவறி யிங்கே முயக்கம் விழைந்தால்
உறையொன்றே காக்கும் உணர்!

வருந்துயரம் வெட்ட மருத்துவரை அண்டி 
ஒருகுருதிச் சான்றை ஒழுங்காய்த் – திருமணத்தின் 
முன்பே இருவர்க்கும் முன்வைத்தால் இல்வாழ்வில் 
நன்றாய்ப் பெருகும் நலம்.
===========================================
இராச. தியாகராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக