திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கல்வியோ கல்வி.....

(நிலைமண்டில அகற்பா)
==============================================

==============================================
கல்வியோ கல்வி....
==================
பெண்ணின் பெருமை போற்றலொரு கல்வி;
தண்மை யுடனே காத்தலொரு கல்வி;
மண்ணின் மேன்மை மனிதமொரு கல்வி;
வெண்மை யென்னும் மெய்ம்மையொரு கல்வி

தடுக்க வியலாத் திரையுமொரு கல்வி;
நடுங்க வைக்கும் நோயுமொரு கல்வி;
நடக்க வைக்கும் கொழுப்புமொரு கல்வி;
அடக்க வியலா அரசுமொரு கல்வி;

பொங்கிடும் நந்தமிழ் நூலுமொரு கல்வி;
மங்கா தொளிதேடும் விட்டிலொரு கல்வி;
செங்கதிர் தீட்டும் செம்மையொரு கல்வி;
கங்கிருட் காட்டின் கருமையொரு கல்வி;
  
நடுக்கிய குளிரில் உறைதலொரு கல்வி;
அடுக்கிய சொல்லின் அசையுமொரு கல்வி;
சொடுக்கிய விரலின் விசையுமொரு கல்வி;
முடுக்கிய வாழ்வின் முனைவுமொரு கல்வி;

கவர்ந்தே இழுக்கும் கனவுமொரு கல்வி;
சிவந்து சிரிக்கும் வானமொரு கல்வி;
பவள மல்லி மலருமொரு கல்வி;
திவலை தெறிக்கும் திரையுமொரு கல்வி;
  
கவர்ந்தே இழுக்கும் கன்னியொரு கல்வி;
பவள மல்லியாம் யிதழுமொரு கல்வி;
குவளை நிகர்த்த விழியுமொரு கல்வி;
அவளின் சிரிப்பில் விழுதலொரு கல்வி;

மின்னித் தோன்றும் வில்லுமொரு கல்வி;
பின்னி யெடுக்கும் மழையுமொரு கல்வி;
சன்னல் ஊடாய் வெளிச்சமொரு கல்வி;
என்னை மறந்த எண்ணமொரு கல்வி;
 
கன்னற் சுவையாம் இனிப்புமொரு கல்வி;
புன்னை வனத்துப் பூக்களொரு கல்வி;
தென்னை வனத்துத் தென்றலொரு கல்வி;
என்னில் முகிழும் கவிதையொரு கல்வி!
====================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக