செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சொல்ல நினைக்கும் ஆசைகள்.....

சொல்லத்தான் நினைக்குமென் ஆசைகள்
(நேரிசை அகவற்பா)
=======================================












=======================================

சொல்லவே யென்மனச் சிந்தனை வானில்
உள்ளதே விடைக ளில்லா ஆசையாம்!
மாநிலம் முழுதும் மலிந்த ஊழல்
காணின் பதைத்துக் கொதித்தி டாமல்
கண்கள் மூடிகைக் குவிக்கும் ஈனமே
மண்ணின் அடியிற் புதைத்து விட்டு;
உள்ளி லொன்றும், உதட்டி லொன்றும்
கள்ளம் பேசும் கோண லரசியல் 
சாதியின வாதமாம் சாய்க்கடை புத்தியை,
வீதியில் நிறுத்தி வெட்டி விட்டு;
நாட்டின் செல்வமாம் நங்கையர் பிறந்ததும்
காட்டில் விளையும் கள்ளிப் பாலதால்
கொல்லும் வீணரின் கொடிய வழக்கை
தலையற நிச்சயம் தட்டி விட்டு;
உலகில் காணும் வன்முறை விருப்பு
உலவு கின்ற தன்மொழி வெறுப்பு
ஓரினம் அழிக்கும் மதவெறி நாசம்
வீரியம் அறுக்கும் போதைப் பாசம்
எல்லா வற்றையும் ஓட்டி விட்டு
நல்லிணக் கமதுவே நம்முன் மெய்யாய்
ஒருநாள் தோன்று மென்றே
விரிவாய்ச் சொல்லிடத் தானென் னாசையே!
=======================================
இராச. தியாகராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக